தஞ்சை மாவட்டம், கொரநாட்டுக் கருப்பூர் பெட்டிக்காளி கோயில்: குபேர நிதி அளிக்கும் ஈசனின் சந்நிதி! | tanjore koranattu karuppur petti kaliamman

Share

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகால வேளையில் பெட்டி திறக்கப்படும். அப்போது சுந்தர மகாகாளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். அவ்வேளையில் அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மற்ற நாள்களில் பெட்டி திறக்கப்படுவதில்லை.

பெட்டியைத் திறந்தபிறகு, வண்ணமிகு மலர்கள், புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து ஆராதிப்பது வழக்கம். சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.

குங்குமம், எலுமிச்சைப்பழம் மற்றும் புஷ்பம் என அம்மன் கோயிலில் தரப்படும் பிரசாதம் எதுவும் இங்கே தரப்படுவதில்லை. விபூதியும் நைவேத்தியமுமே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகின்றன.

இந்தக் காளியைத் தரிசிப்பதற்கு வேறுசில கட்டுப்பாடுகளும் உண்டு. கர்ப்பிணிகள், எண்ணெய் ஸ்நானம் செய்தவர்கள், முகச்சவரம் செய்தவர்கள் காளியைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

கொரநாட்டுக் கருப்பூர் பெட்டிக்காளி கோயில்

கொரநாட்டுக் கருப்பூர் பெட்டிக்காளி கோயில்

ஸ்ரீசுந்தரேஸ்வரரை வழிபட்டு, குபேரன் செல்வத்துக்கு அதிபதியாக வரம்பெற்ற தலம் இது என்பதால் தீபாவளித் திருநாளுக்கு மறுநாள் கேதாரகௌரி நோன்பு அன்று ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் ஸ்ரீஅபிராமி யம்மைக்கும் சிறப்பு குபேர பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த நாளில் நடைபெறும் ஹோமம், அபிஷேகம், விசேஷ பூஜை ஆகியவற்றில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் இங்கு வந்து, பெட்டிக்காளியம்மனுக்கு நெய் தீபமேற்றி வணங்க வேண்டும். ஆறாவது வெள்ளிக் கிழமையன்று, சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து அம்மனை வணங்கினால், வேண்டியது கிடைக்கும் என்கிறார்கள்.

மேலும், சர்க்கரைப் பொங்கல், உப்பு இல்லாத தயிர் சாதம் மட்டுமே அம்மனுக்குப் படைக்கிறார்கள். உப்பு சேர்த்த எந்தப் பொருளையும் நைவேத்தியம் செய்வதில்லை. பெட்டியைத் திறப்பதற்கு முன்னர், உக்கிரக் காளியைக் குளிர்விக்கும் பொருட்டு, குளிர்ச்சி தரும் தயிர்ப் பள்ளயம் போடப்படுகிறது.

பசுந்தயிர் கலந்த சாதத்தில் வெங்காயம் நறுக்கிச் சேர்த்துப் பள்ளயம் போடப்படும். இதனால் காளியின் வெம்மை தணிந்து குளிர்வாள் என்கிறார்கள் பக்தர்கள்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை பெட்டிக்காளியையும் குபேரனுக்கு அருளிய சுந்தரேஸ்வரரையும் தரிசித்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com