கேப்டன்சிக்கு முன், கேப்டன்சிக்கு பின்…
சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவு, அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு மிகவும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஜூலை 2024-ல் கேப்டன் ஆனதிலிருந்து, அவரது பேட்டிங் சராசரி 25.88 ஆகக் குறைந்துள்ளது. இதில் ஆறு அரை சதங்கள் அடங்கும், ஆனால் நான்கு முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதுவே, கேப்டன்சிக்கு முன்பு அவரது ஆட்டத்திறன் உச்சத்தில் இருந்தது. அப்போது அவரது சராசரி 43.60 ஆகவும், 4 சதங்கள் மற்றும் 20 அரை சதங்களையும் விளாசியிருந்தார். கேப்டன் பதவி கொடுத்த அழுத்தம் அவரது இயல்பான ஆட்டத்தைப் பாதித்துவிட்டதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
வெற்றிகளுக்குப் பஞ்சமில்லை… ஆனாலும் இந்த முடிவு!
பேட்டிங்கில் தடுமாறினாலும், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு மகத்தான வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். அவரது தலைமையில்தான் இந்தியா 2025 ஆசியக் கோப்பையையும், 2026 டி20 உலகக் கோப்பையையும் வென்றது. இதற்கு முன், 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் முக்கிய வீரராக இடம்பிடித்திருந்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கி, unorthodox ஷாட்கள் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவராகவே அவர் அறியப்பட்டார்.