ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது.
அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இமாலய ரன்களைக் குவித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் பந்துவீச்சாளர்களின் நிலை குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

போட்டிக்குப் பிறகு பேசிய அக்சர் படேல், “ரன்-அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம்.
ஒருவேளை அபிஷேக் சர்மாவின் அந்த வாய்ப்பை நாங்கள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், அவர்களைக் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கலாம்.
ஆனால், ஒரு பேட்ஸ்மேன் அவ்வளவு சிறப்பாக விளையாடும்போது, அவருக்கு நாம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும்.
ஒரு பேட்ஸ்மேன் இதுபோல வெறித்தனமாக ஆடும்போது, யாராலுமே அவரைத் தடுக்க முடியாது. நீங்கள் திட்டமிட்டபடி சரியாகப் பந்துவீசியும், அவர் நல்ல ஷாட் அடித்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பந்துவீச்சாளர்களிடமும் இதையேதான் சொன்னேன்.
பீல்டிங் என்பது நம் கையில் இருக்கும் விஷயம். கேட்ச் பிடிப்பது மற்றும் ரன்-அவுட் செய்வதை நாம் சரியாகச் செய்திருக்க வேண்டும்.

இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் முக்கியம். அந்த இடத்தில்தான் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை” என்று அக்சர் படேல் பேசினார்.