நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட இந்தியாவிற்கு வந்திருக்கிறது. முதல் ஓடிஐ போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக திடீரென அணியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக ரஜத் பட்டிதர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஆண்டின் இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பைக்காக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓர் ஆலோசனையை வழங்கியுள்ளார். அதாவது, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் டாஸை வெல்லும் அணிக்குக் கூடுதல் சாதகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. துபாயில் 2021-ல் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்த விஷயத்தை அனைவருமே உணர்ந்திருப்போம். இதை மனதில் வைத்தே அஷ்வின் ஒரு ஐடியாவை வழங்கியிருக்கிறார். அதாவது, ஒருநாள் போட்டியை மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக முன்னதாக 11:30 மணிக்கே தொடங்கினால் ஆட்டத்தில் பனியின் தாக்கம் பெரிதாக இருக்காது எனக் கூறியுள்ளார். அஷ்வினின் இந்த ஐடியாவை இந்திய கேப்டன் ரோஹித்தும் ஆமோதித்துப் பேசியிருக்கிறார். அதேநேரத்தில், இதை ஒளிபரப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் பற்றி இணையதளத்தில் பெரும் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பாபர் அசாம் ஒரு பெண்ணுக்குப் பாலியல் ரீதியாக குறுஞ்செய்தி அனுப்பியதாகச் சில புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தன. எந்தவித உறுதித்தன்மையும் அற்ற அந்த வீடியோக்களை வைத்துக் கொண்டு சிலர் பாபர் அசாமுக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்க, ஹர்சா போக்லே உட்பட கிரிக்கெட் ஆர்வலர்கள் சிலர் பாபர் அசாமுக்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.