Rh+ve உள்ள சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள Rh குருதி முறைமையிலுள்ள D ஆன்டிஜென்னை தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. எனவே, தாயின் குருதியில் சிசுவின் குருதி கலக்கும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள ‘D ஆன்டிஜென்னிற்கெதிராக செயற்கை முறையில் ‘D’ ஆன்டிபாடிகளை செலுத்தினால், தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு சிசுவின் ‘D’ ஆன்டிஜெனை உணர்வதையும், அவரது உடலில் Rh ஆன்டிபாடிகள் உருவாவதும் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும். முன்பு, ஏற்கெனவே Rh ஆன்டிபாடிகள் உள்ளவரது குருதி நீர்மத்திலிருந்து (plasma), D ஆன்டிபாடிகள் பிரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, Anti-D ஊசிகள் உருவாக்கப்பட்டன. தற்போது, செயற்கை முறையில், மீளிணைதிற தொழில்நுட்ம் (recombinant technology) உதவியுடன் உருவாக்கப்பட்ட Anti-D ஊசிகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் Anti-D ஊசிகள் 2000 – 4000 ரூபாயில் கிடைக்கப் பெறுகின்றன.
பிரசவம், கருக்கலைப்பு, விபத்து போன்ற நிகழ்வுகளின் போது, சிசு-தாய் ரத்தப்போக்கு (Feto-maternal hemorrhage) ஏற்பட்டு, சிசுவின் ரத்தம், தாயின் குருதியோட்டத்தில் கலந்துவிடும். சிசு-தாய் ரத்தப்போக்கு பிரசவத்தின்போது மட்டுமல்லாமல், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடலாம். எனவே, எப்போதெல்லாம் சிசு-தாய் ரத்தப்போக்கு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளதோ அப்போதெல்லாம் Anti-D ஊசி கொடுக்கப்பட வேண்டும்.
சிசு-தாய் ரத்தப்போக்கு இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடும் என்பதால், 1500 IU Anti-D ஊசி, கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் கொடுக்கப்படும். Anti-D ஊசி 12 வாரங்கள் வரை பாதுகாப்பு தரக்கூடியவை என்பதால், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிசு-தாய் ரத்தப்போக்குக்கெதிராக பாதுகாப்பு தரவல்லது. பிரசவத்திற்குப் பிறகு, பரிசோதனையில் குழந்தையின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், 72 மணி நேரத்திற்குள் உடனடியாக, 1500 IU Anti-D ஊசி, தாய்க்கு கொடுக்கப்பட வேண்டும். கருக்கலைப்பின் போது 500 IU Anti-D ஊசியும், வயிற்றின்மீது விபத்தோ, சிசு இறப்பு ஏற்பட்டாலோ, 1500 IU Anti-D ஊசி கொடுக்கப்பட வேண்டும்.