கனடாவின் நயாகரா ஆன் தி லேக் நகரில் சனிக்கிழமையன்று 2026 உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில்,எகிப்து வீராங்கனையான ருகையா சேலமை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் முதல் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியனாக “அனஹத் சிங்” உருவெடுத்துள்ளார்.
முதல் நிலை வீராங்கனையான அனஹத் சிங் தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் இரண்டாம் நிலை வீராங்கனையான ருகையா சேலமை 3-0(11-3,11-7,11-9)என்ற கணக்கில் தோற்கடித்து, எகிப்தின் 13 ஆண்டுக்கால தொடர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
2005 ஆம் ஆண்டில் “ஜோஷ்னா சின்னப்பா” ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு 21 ஆண்டுகள் கழித்து தற்போது அனஹத் சிங் அவரின் சாதனையை விட ஒரு படி மேலேறி பட்டம் வென்று இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பட்டத்தை வென்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் இந்த தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனஹத் சிங், விளையாடிய ஆறு ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை மட்டுமே இழந்தார். மேலும் தனது முதல் முன்று ஆட்டங்களில் ஒரு கேமை கூட இழக்காமல் வெற்றி பெற்றார்.

மூத்தோர் பிரிவு PSA பயணத்தில் உலகத் தரவரிசையில் 20 ஆவது இடத்தில் உள்ள இவர், ஆஸ்திரேலியாவின் லில்லி வில்சனை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தார். பின்னர் சீனாவின் புய் யின் குளோ லோ(Pui yin Chloe lo) மற்றும் மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீ(Doyce ye san lee)ஆகியோரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.