அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, தனது பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிக்ஸர் அடிக்க, அதை பவுண்டரி லைனிலிருந்து ஷ்ரேயஸ் தாவித் தடுக்க, மீண்டும் அதைப் பார்ட்லெட் பிடிக்க,பெவிலியனில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹித் திகைக்க எனப் பல டிராமாக்களுக்குப் பிறகு 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் ஹர்திக். ஒருவழியாக 20 ஓவர் முடிவில் 195 ரன்கள் எடுத்தது மும்பை அணி.
இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்த பும்ரா, இந்த போட்டியை முடித்துக் கொடுப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த மும்பை ரசிகர்களின் ஆசையில் மீண்டும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார். நான்கு ஓவர்கள் வீசி 41 ரன்களை வாரி வழங்கி, ஒரு விக்கெட் கூட எடுக்காமல் விட்டார். “என்னதான் ஆச்சு நம்ம நேஷனல் ட்ரஷருக்கு?” என்பது போல் மீம்ஸ்களைப் பறக்க விட்டனர் மீம் கிரியேட்டர்கள்.
கஷன்ஃபர் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளைத் தூக்கினாலும், “நாங்க பஞ்சாப்பை எப்படியாவது வெல்ல வைப்போம்” என்ற நோக்கில் மற்றவர்கள் பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் அதிரடி ஆட்டம் போட்டியின் முடிவைத் தீர்மானித்தது. விக்கெட்டைத் தேடிக்கொண்டிருந்த மும்பை பந்துவீச்சாளர்களை, “நாங்கள் சிக்ஸரைத் தேடுகிறோம்” என்று இந்த இணையினர் அடித்து நொறுக்கினர்.
196 என்ற இலக்கை 16.3 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் அணி. அதிகபட்சமாகப் பிரப்சிம்ரன் 80 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 66 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் தோல்வியே காணாத அணியாகப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது பஞ்சாப்.
அணியில் பல மாற்றங்கள் செய்தாலும் மும்பை அணிக்கு ரிசல்ட் என்னவோ ஒன்றாகவே இருக்கிறது. “பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும்” என்ற நோக்கில் மும்பை விளையாட, “பஞ்சாயத்தே பைனலுக்கு வந்துவிட்டது, இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்பது போல் இருந்தது நீடா அம்பானியின் ரியாக்ஷன். கொல்கத்தா அணிக்குக் கம்பெனி கொடுத்துக்கொண்டு, அதே ஒன்பதாவது இடத்திலேயே தொடர்கிறது மும்பை அணி.