கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள், தங்கள் குடியிருப்பு அமைந்துள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் சாலை, குடிநீர், மின்சார வசதிகளைச் செய்து கொடுக்குமாறு வலியுறுத்தினார்கள். அத்துடன், தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், குடியிருப்பைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா அமைத்துக் கொடுக்கவும் வலியுறுத்தினார்கள். அதை ஏற்று அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்தி கொடுக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.
வள்ளியூரை சேர்ந்த சௌபர்ணிகா என்ற திருநங்கை பேசுகையில், “நான் நெல்லையில் உள்ள மகளிர் கல்லூரியில் எம்.எஸ். டபிள்யூ முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது கல்விச் சான்றிதழில் ஆண் பெயர் இருக்கிறது. அதை மாற்றிக் கொடுக்குமாறு பல்கலைக்கழகத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை மாற்றப்படவில்லை. வள்ளியூரில் இருந்து தினமும் பேருந்தில் வரும் எனக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும். கல்லூரிப் படிப்புக்காக எனக்கு மடிக்கணினி தேவைப்படுகிறது. அதையும் மாவட்ட நிர்வாகம் கொடுத்து உதவ வேண்டும்” என்றார்.