பட மூலாதாரம், Image source,Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Images
-
- எழுதியவர், உர்விஷ் கோத்தாரி
- பதவி, பிபிசி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக காந்தியின் உண்ணாவிரதமும் மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகியுள்ளது.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை விமர்சிப்பவர்களில் சிலர், காந்தியின் உண்ணாவிரதமும் ஒரு வகையான பிளாக்மெயில்தான் என்று கூறினர். வேறு சிலரோ வரலாற்று உண்மைகளைத் தள்ளி வைத்துவிட்டு, எதிரே இருந்தது பிரிட்டிஷ் அரசு என்பதால்தான் காந்தி உண்ணாவிரத ஆயுதம் வெற்றி பெற்றது என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.
வரலாற்று உண்மை முற்றிலும் வேறானது. 1915 ஆம் ஆண்டில் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததில் இருந்து, ஜனவரி 30, 1948 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரையிலான அவரது வாழ்நாளில் சுமார் முப்பது முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
‘காந்தியின் நாட்குறிப்பு’ போன்ற வரலாற்று ஆதார நூலின் பதிப்பாசிரியரான சந்துலால் தலால், காந்தியின் ‘அனைத்து உண்ணாவிரதங்களும் பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருந்திருக்கலாம்’ என்ற குறிப்புடன் அவரது உண்ணாவிரத விவரங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.
அவற்றில் ஒரு நாள் முதல் இருபத்தியொரு நாட்கள் வரையிலான காலவரையறை கொண்ட உண்ணாவிரதங்கள் அடங்கும்.
இந்த பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், காந்தியின் உண்ணாவிரதங்களில் நான்கு மட்டுமே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தன என்பதாகும்.
அரசாங்கத்திற்கு எதிரான உண்ணாவிரதத்தை சத்யாகிரகத்தின் இறுதிப் படியாகவே காந்தி கருதினார்.
அவரது மற்ற உண்ணாவிரதங்களில் பெரும்பாலானவை, அவரது சொந்த சகாக்கள் மற்றும் நெருக்கமானவர்களால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு தவறுக்காக (சுயசுத்தம் அல்லது பிராயச்சித்தமாக) இருந்தவை.
ஏனெனில், சகாக்களின் அத்தகைய நடத்தைக்கு தான் தான் பொறுப்பு என்று அவர் கருதினார். அவரது உண்ணாவிரதத்தின் மற்றொரு முக்கிய நோக்கம் மத நல்லிணக்கம் மற்றும் மக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகும்.
இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக அவர் முதன்முதலாக 1924-ஆம் ஆண்டில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
அவர் படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, அதே நோக்கத்திற்காக அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
உண்ணாவிரதமும் பூனா ஒப்பந்தமும்
பட மூலாதாரம், Getty Images
யெரவாடா சிறையில் இருந்த காந்தி 1932 இல் மேற்கொண்ட உண்ணாவிரதம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.
ஏனெனில், பிரிட்டிஷ் பிரதமர் தலித்துகளுக்கு அறிவித்த தனித் தொகுதிக்கு எதிராக அந்த உண்ணாவிரதம் இருந்தது. அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக அம்பேத்கர் பணிந்து வந்து, இந்து தலைவர்களுடன் பூனா ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இதன் காரணமாக தலித்துகளுக்குத் தனித் தொகுதிக்கு (தலித் வாக்காளர்கள் மட்டுமே தலித் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற ஏற்பாடு) பதிலாக, தொகுதிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த உண்ணாவிரதம் பிரிட்டிஷ் பிரதமரின் அறிவிப்புக்கு எதிரானதாக இருந்தபோதிலும், உண்மையில் இதன் நோக்கம் தலித்துகளின் நலன்களையும் உரிமைகளையும் பாதிப்பதாக இருந்ததால், இது பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான உண்ணாவிரதமாகக் கருதப்படுவதில்லை.
“ஆறு நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதத்திற்குப் பிறகு, அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சத்தியாகிரகியும் சீர்திருத்தவாதியுமான அப்பாசாஹேப் பட்வர்தன் சிறையில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் குழுவில் சேருவதற்கு அனுமதி கோரினார்.
அரசு அதற்கு அனுமதி வழங்காததால், அப்பாசாஹேப் தனது உணவு உட்கொள்ளும் அளவை முற்றிலும் குறைத்துக் கொண்டார். தலித் அல்லாத அப்பாசாஹேப்பின் இந்த துப்புரவுப் பணி கோரிக்கையைத் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கருதி, அவரது கோரிக்கைக்கு ஆதரவாக காந்தியும் 3 டிசம்பர் 1932 அன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஆனால் ஒரே நாளில், அரசு இதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், காந்தி அந்த உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தார்.
அடுத்த ஆண்டு ஆண்டில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதங்களும் தீண்டாமை ஒழிப்பு மற்றும் தலித் சமூகத்தின் சேவைகளுடன் தொடர்புடையதாகவே இருந்தன.
இதற்கு முந்தைய சிறைவாசத்தின் போது, அரசியல் கைதியாகக் கருதப்பட்டதால், இந்தப் பணிகளைச் செய்ய பிரிட்டிஷ் அரசு அவருக்கு அனுமதி அளித்தது.
ஆனால் 1933-ஆம் ஆண்டு, அந்தப் பணிகளைத் தொடர அரசு அனுமதி மறுத்தது. இதற்கு காந்தி பலமுறை அனுமதி கோரினார்.
இதையடுத்து, காந்தி பம்பாய் அரசின் உள்துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், தீண்டாமை ஒழிப்புக்காகத் தாம் மேற்கொண்டு வந்த பணி, ஏர்வாடா (பூனா) ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாம் எடுத்த உறுதிமொழியின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். மேலும், அந்தப் பணி தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்றும், உயிரைத் தியாகம் செய்யாமல் அந்தப் பணியை நிறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
அரசு தொடர்ந்து மறுத்ததால், அதற்கு எதிர்ப்பாக 1933 ஆகஸ்ட் 16 அன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இந்த உண்ணாவிரதத்தால் அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, இதனால் ஆகஸ்ட் 20 அன்று அவர் புனேயில் உள்ள சாசூன் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டியிருந்தது.
அதற்குப் பிறகும் அவரது நிலைமை தொடர்ந்து மோசமடைந்தது. காந்தியே தான் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையைக் கைவிட்டிருந்தார்.
ஆகஸ்ட் 21 அன்று கஸ்தூரிபாவும் அங்கு வந்து சேர்ந்தார். மரணம் நெருங்கிவிட்டதாகத் தோன்றியதால், மருத்துவமனையில் காந்திக்கு சிகிச்சை அளித்தவர்களுக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன, ஆனால் காந்தி உயிர் பிழைத்தார்.
ஆகஸ்ட் 23 அன்று அரசு அவரை விடுதலை செய்தது, அதன்பிறகு அவர் மருத்துவமனையில் ஆரஞ்சு சாறு குடித்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
பொய்யான குற்றச்சாட்டும், உயிரைப் பணயம் வைத்தலும்
பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 1933 உண்ணாவிரதத்திற்குப் பிறகு காந்தி, ”நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்ணாவிரதம் என்பது எனக்கு அன்றாட நிகழ்வு போன்ற ஒன்றாக மாறிவிட்டது. இதில் என்ன வருத்தம்? உண்ணாவிரதம் என்பது எனது வாழ்க்கையோடு பிணைக்கப்பட்ட ஒரு விஷயமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும், எனவே எனது உடலின் மீதான பற்றை நான் கைவிட வேண்டும்…” என்று எழுதியிருந்தார்
இதை எழுதிய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை உண்ணாவிரதத்தின் போது காந்தி மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார்.
ஆகஸ்ட் 1942-இல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் காங்கிரஸ் தலைவர்களை கைது செய்து, போராட்டத்தை ஒடுக்க முயன்றது. அந்தப் போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது.
அதற்குப் பொறுப்பாக காந்தியையும் காங்கிரஸையும் பிரிட்டிஷ் அரசு குற்றம்சாட்டியது.
பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலைப் போலவே, வைஸ்ராய் லின்லித்கோவுக்கும் காந்தி மீது கடுமையான உள்நோக்கமும் துவேஷமும் இருந்தது.
நாட்டின் அமைதியின்மைக்கு காந்தியே காரணம் என்று அவர் தீர்க்கமாக நம்பினார். இது தொடர்பாக காந்திக்கும் வைஸ்ராய்க்கும் இடையே நீண்ட கடிதப் பரிமாற்றம் நடந்தது.
வைஸ்ராய் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டினால், எந்தவொரு தயக்கமுமின்றி தனது தவற்றை ஒப்புக்கொள்வதாக அவருக்கு காந்தி எழுதினார். இல்லையெனில், அவர் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார்.
வைஸ்ராய் தனது நிலையில் இருந்து இறங்கி வராததால், காந்தி தனது 73-ஆவது வயதில் ஆகா கான் அரண்மனை சிறையில் 21 நாட்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அப்போதைய அவரது உடல்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, அவர் இந்த 21 நாட்கள் உண்ணாவிரதத்தை எவ்வித பாதிப்பும் இன்றி முடிப்பதற்கான வாய்ப்புகள் துளியும் இருக்கவில்லை.
மற்றொரு சிறையில் இருந்த காங்கிரஸ் மருத்துவரான கில்டர், காந்தியைக் கண்காணிப்பதற்காக இங்கு கொண்டு வரப்பட்டார்.
மருத்துவர் சுசீலா நாயர் ஏற்கனவே அவருடன் இருந்தார். பிரிட்டிஷ் மருத்துவரான மேஜர் ஜெனரல் கேண்டியும் காந்தியின் உடல்நிலையை மிகுந்த கவலையுடன் கவனித்து வந்தார்.
பிப்ரவரி 10 அன்று தொடங்கிய உண்ணாவிரதத்தில் காந்தியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே இருந்தது. காந்திக்கு வழங்கப்படும் தண்ணீரில் பழச்சாறு கலக்க வேண்டும் என்று மேஜர் ஜெனரல் கேண்டியும் வற்புறுத்தி வந்தார். இல்லையெனில் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றார்.
ஆனால் காந்தியிடமிருந்து தெளிவான அறிவுறுத்தல் வராதவரை, அந்தப் படியை எடுக்க யாரும் தயாராக இல்லை. தண்ணீர் குடிப்பதற்கே அவர் மிகவும் சிரமப்பட்டார்.
அவரது சுவாசத்தில் அசிட்டோன் வாசனை மற்றும் சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும் யூரேமியா வாசனை வீசியது. இறுதியாக, பிப்ரவரி 21 அன்று மாலை அவர் மருத்துவர் சுசீலா நாயரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்.
அதைப் பற்றி மருத்துவர் சுசீலா நாயர் தனது குறிப்பில் எழுதியிருக்கிறார். “தன்னால் தண்ணீர் குடிக்க முடியாவிட்டால், அதைக் குடிப்பதற்கு உகந்ததாக மாற்றுவதற்காக மிகக் குறைந்த அளவில் சாத்துக்குடி சாற்றைப் பயன்படுத்துவதாக அவர் முதலிலேயே கூறியிருந்தார்…” என அவர் குறிப்பிட்டுள்ளார். (பாபுவின் சிறைவாசக் கதை, பக்கம்.278-9).
அதன்பிறகு அவரது உடல்நிலை சற்று சீரானதும், மருத்துவர்களின் அறிவுரையைப் புறக்கணித்து, மீண்டும் அவர் பழச்சாற்றின் அளவைக் குறைத்துக் கொண்டார்.
இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து நலிவடைந்தே இருந்தது, மருத்துவர்களும் தொடர் கவலையில் இருந்தனர். ஆனால், மீண்டும் ஒரு மோசமான ஆபத்தான சூழ்நிலை ஏற்படவில்லை.
பிரிட்டிஷ் அரசாங்கமும் காந்தியின் மரணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது
பட மூலாதாரம், Getty Images
இந்த உண்ணாவிரதத்தின் போது வைஸ்ராய் மட்டுமல்ல, பிரிட்டனின் பிரிட்டிஷ் அரசும் காந்தியின் மரணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
காந்தியின் நெருங்கிய தோழரான மீராபென் தனது நினைவுக்குறிப்புகளில் எழுதியுள்ளபடி, “அரசு இறுதிச் சடங்கிற்காகச் சந்தனக் கட்டைகளையும் இதர விறகுகளையும் கூட முன்கூட்டியே ஆர்டர் செய்து வைத்திருந்தது என்பதும், இறுதி ஊர்வலத்தை எந்த வழியே கொண்டு செல்ல வேண்டும் என்பதைத் திட்டமிட்டு வைத்திருந்தது என்பதும் பின்னர்தான் தெரியவந்தது.”
“அதே நேரத்தில், நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளை மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், பாபுவின் மரணச் செய்திக்குத் பிறகு ஏதேனும் கலவரம் வெடித்தால் அதை உடனடியாக ஒடுக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.”
உண்ணாவிரதத்தின் தத்துவம் மற்றும் இலக்கணம் குறித்து காந்தி தனது கட்டுரைகளிலும் கடிதங்களிலும் விரிவாக விவாதித்துள்ளார், ஆனால் தற்போதைய காலத்தில் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதங்களைப் பாராட்டுவதற்கோ அல்லது கண்டிப்பதற்கோ அந்த எழுத்துக்களைப் பயன்படுத்த முயன்றால், அது அநீதியாக முடிவதற்கே அதிக வாய்ப்புள்ளது.
அந்த எழுத்துக்களைக் காந்தியின் எண்ணங்களையும் முடிவுகளையும் புரிந்து கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு