கரூர் மாவட்டம், சின்னாண்டாங்கோவில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் கலைமதி.
இவர், சரிவர பணிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் அண்மையில் சைல்டு லைனில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இதுகுறித்த விசாரணை அடிப்படையில் கலைமதி குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியை புவனா அறிக்கை அளித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கலைமதி, வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த புவனாவை கன்னத்தில் கடுமையாக அறைந்து, அவரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இந்தச் சம்பவம் வகுப்பறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து, இடைநிலை ஆசிரியை கலைமதியைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகவேல் உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியையைத் தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.