த் த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை.
சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது.
வழக்கமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்காகப் போராடும் சி.எஸ்.கே, இந்த முறை 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 7-வது இடத்தில் தத்தளித்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அணியின் நம்பிக்கைக்குரிய இளம் வீரராக இருக்கும் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.
நாதன் எல்லிஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து முழுமையாக விலகினார். அடுத்து, தோனியும் கணுக்கால் காயம் காரணமாக 2 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
டிவால்ட் பிரெவிஸ் காயம் காரணமாக முதல் 3 போட்டிகளைத் தவறவிட்டார். கலீல் அகமது பந்துவீசிக்கொண்டிருக்கும் போதே காயத்தால் வெளியேறி, தற்போது தொடரில் இருந்தும் வெளியேறிவிட்டார்.
2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் காயங்களால் வெற்றியை பெற தடுமாறிவருகிறது.
இந்நிலையில் நாதன் எல்லிஸுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்பென்சர் ஜான்சனை சிஎஸ்கே நிர்வாகம் அணியில் இணைத்திருக்கிறது.

இதனை அதிகாரப்பூர்வமாகவும் அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
ஸ்பென்சர் ஜான்சன் இதுவரை ஐபிஎல்லில் 9 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார்.
பிறகு 2025- ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார்.
புள்ளிவிவரங்களைப் பார்த்தால் ஸ்பென்சர் ஜான்சன் இதுவரை ஐபிஎல்லில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மைதான்.
ஆனால், அவரிடம் இருக்கும் சில பிளஸ் பாயிண்ட்டுகள் சிஎஸ்கே-வுக்கு உதவக்கூடும். ஸ்பென்சர் ஜான்சன் 145+ கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர்.

அவரது உயரம் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சவாலாக இருக்கும். ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் அணிக்குத் தேவை, அதற்கு ஸ்பென்சர் ஜான்சன் சரியாக இருப்பார் என்றும் கலீல் அகமதின் இடத்தையும் இவர் ஓரளவுக்கு நிரப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.