அமெரிக்காவில், சுவாச மண்டலத்தில் மிதமான சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.வி வைரஸ் (Respiratory syncytial virus), காய்ச்சல் (flu) மற்றும் கோவிட் 19 (covid 19) ஆகிய நோய்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மூன்று வைரஸ் நோய்த்தொற்றுக்களை ட்ரிபுள்டெமிக் (Tripledemic) என்று அழைக்கின்றனர்.
காய்ச்சலைக் கட்டுப்படுத்த, வெங்காயத் தண்ணீரைக் குடித்தால் போதும் என்ற வீடியோவால் அதிகப்படியான மக்கள் திசை திரும்பி உள்ளனர்.
`போதுமான அளவில் வெங்காயம் உண்பது தீங்கு விளைவிக்காது, அதிகப்படியாகத் துர்நாற்றத்தை மட்டும் ஏற்படுத்தும். ஆனால் இதுபோன்ற வீடியோக்கள், பொதுச்சுகாதாரத்தை சமரசம் செய்யும் வகையிலும், வீட்டு வைத்தியத்தில் குருட்டுத் தனமான நம்பிக்கையை ஊக்கப்படுத்தவும் செய்கின்றன’ என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து இல்லினாய்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணரும், உதவிப் பேராசிரியருமான கேத்ரின் வாலஸ் கூறுகையில், “வெங்காயம் யாரையும் காயப்படுத்தப் போவதில்லை. ஆனால் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், உண்மையான மருத்துவ உதவியை நாட வேண்டும்.
மருத்துவ உதவிகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமல், வெறும் வெங்காயத் தண்ணீரை மட்டும் குடிப்பவர்கள், கோவிட் மற்றும் காய்ச்சலை சமூகத்தில் பரப்பக் கூடும் என்ற அச்சம் இருக்கிறது. வீடியோக்களை பார்த்த மக்கள் `எனக்கு இது வேலை செய்தது’ எனக் கூறி வருகின்றனர்” என வருத்தம் தெரிவித்தார்.
புரிஞ்சுக்க குமாரு… வெங்காய தண்ணீ குடிச்சாலாம் காய்ச்சல் குணமாகாது!