ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற ஜூன் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன், இந்திய அணி மோத இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்த இந்திய அணி, இந்த முறை எப்படியாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முகமது சமியின் பந்துவீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்குத் திருப்புமுனையாக இருக்கப்போகும் வீரர் முகமது சமிதான். ரோஹித் சர்மா அவரைச் சிறப்பாகக் கையாள வேண்டும். புதிய பந்து மற்றும் பழைய பந்து என இரண்டையும் சிறப்பாகக் கையாளக்கூடியவர் சமி.
எந்த நேரத்திலும் ஸ்விங் செய்வார். ஆஸ்திரேலிய வீரர்களே அவரை கவனமாகத்தான் எதிர்கொள்வார்கள். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், இவரின் பந்துவீச்சு அதற்கு முக்கியமான காரணமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.