Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா அல்லது பலமான விருந்துக்குப் பிறகு மட்டும் போட்டுக்கொண்டால் போதுமா? வெற்றிலை, பாக்கு போட்டால் பற்கள் கறையாகும் என்பதால் பல் மருத்துவர்கள் அதைத் தவிர்க்கச் சொல்கிறார்களே…. தாம்பூலம் போடும் சரியான முறை என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
வெற்றிலை, பாக்கு போடுவது மிகவும் சரியானதே. நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் காலங்காலமாகப் பின்பற்றிய நல்ல வழக்கம் இது. இதை ஆரோக்கியத்துக்கான அன்றாடப் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
திருமண வீடுகளிலும் விசேஷ விருந்துகளிலும் விருந்துக்குப் பிறகு போட்டுக்கொள்வதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்திருப்பார்கள். நம் உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று விஷயங்கள் உண்டு. இந்த மூன்றும் குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும்.
காலையில் வெற்றிலை, பாக்கு போடும்போது பாக்கின் அளவை சற்று அதிகரித்துக்கொள்ளலாம். துவர்ப்புச்சுவை கொண்ட பாக்கு, மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக்கூடியது. மதியம் வெற்றிலை, பாக்கு போடும்போது சுண்ணாம்பின் அளவை சற்று அதிகரித்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.
இரவில் வெற்றிலை கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும்.