சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை.
சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது.
இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியிருக்கும் சிஎஸ்கே இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அணியின் நம்பிக்கைக்குரிய இளம் வீரராக இருக்கும் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டிருப்பது, சி.எஸ்.கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 20) ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் அவரது இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.
கடுமையான வலியால் சரியாக நடக்கக்கூட முடியாத நிலையிலும், அணியின் வெற்றிக்காகத் தொடர்ந்து விளையாடிய அவர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரது காயம் குணமடைய நீண்ட நாள்கள் ஆகும் என்பதால் தொடரில் பங்கேற்காமல் போவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்படி அவர் தொடரில் பங்கேற்காவிட்டால் அது சி.எஸ்.கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும்.
ஏனென்றால் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கும் அவர் தொடர்ந்து ரன்கள் குவித்து அணிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்.

பஞ்சாபுக்கு எதிராக 73 ரன்களும், டெல்லிக்கு எதிராக 59 ரன்களும், கொல்கத்தாவுக்கு எதிராக 38 ரன்களும், ஹைதராபாத் அணிக்கு எதிராக 30 ரன்களும் அதிரடியாக விளாசி ரசிகர்களின் நம்பிக்கையை ஆயுஷ் மாத்ரே பெற்றிருந்தார்.
ஒருவேளை ஆயுஷ் மாத்ரேவால் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றால் அவருடைய இடத்தில் உர்வில் பட்டேலை களமிறக்க சி.எஸ்.கே முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் கனவு நனவாகும் என்பதால், வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் சி.எஸ்.கே-வுக்கு வாழ்வா-சாவா போராட்டமாகவே இருக்கும்.