முதல்போட்டி டிரா ஆக, இரண்டாவது போட்டியில் மூழ்க இருந்த இந்தியக்கப்பல் தோல்வியின் அடிமட்டத்தைத் தொட்டு பின் மீண்டெழுந்து முகடைத் தொட்டது. மெல்போர்னிலோ மீண்டுவந்து ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த 1-1 எனத் தொடர் சமநிலையை எட்டியது. இதுவரை எல்லாவற்றையும் சரியாகவே செய்த இந்தியாவுக்குள் நான்காவது போட்டியில்தான் சற்றே டிஃபென்சிவ் மனப்பான்மை குடியேறியது. நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 700 ரன்களைக் கடந்த பிறகுதான் டிக்ளேர் செய்தது. ஓட்டுக்குள் ஆமையாக ஒளிந்து கொள்ளாது துணிவைத் துணைக்கழைத்து சற்றே முன்னதாக அதனைச் செய்திருந்தால் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டிருக்கும். வாழ்வோ சாவோ மோதிப் பார்க்கலாம் என்ற எண்ணம்தான் இப்போதுள்ள அணிக்கும் அப்போதிருந்த அணிக்குமான ஒரே வித்தியாசம்.
தனது ஸ்பின் பலவீனத்தைக் களைய அந்த அனாலிஸ்டுகள் அத்தனை பேரின் உதவியையும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கேட்கும்படியான நிலையை 2012/13 தொடர் உருவாக்கியது. 2011/12-ல் இந்தியாவை 4-0 என ஆஸ்திரேலியா வீழ்த்த, இத்தொடரில் சிலிர்த்தெழுந்து சீறி அதேபோல் 4-0 என அவர்களை வீழ்த்தி கொடுக்கல் வாங்கல் கணக்கை நேர்செய்தது இந்தியா. இத்தொடர் முழுவதுமே சக்கர வியூகத்துக்குள் சிக்கித் தவித்தது போல சுழலிலிருந்து மீள வழி தெரியாது தவித்தது ஆஸ்திரேலியா.
அஷ்வின் – ஜடேஜா கூட்டணி மூச்சுவிடும் அவகாசம்கூட தராது சுழன்று மாறிமாறித் தாக்கியது. அஷ்வின் 29 விக்கெட்டுகளையும் ஜடேஜா 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் பிரதான சுழல் பந்துவீச்சாளரான லயான் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இருப்பினும் இந்தியக்கூட்டணி ஏற்படுத்திய அளவு தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை.
குறிப்பாக ஆஸ்திரேலியாவின் டாப்ஆர்டர்தான் பெரிதாகத் தள்ளாடியது. இத்தொடரில் எந்தளவு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள் என்றால் இந்திய மண்ணை தங்களது நாட்டிற்கு ஏற்றுமதி செய்து ஸ்பின்னுக்கு கைகொடுக்கும் பிட்சுகளை உருவாக்கி தனது வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முடிவை எல்லாம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டை எடுக்க வைத்தது.