பிறந்த குழந்தைக்கு பசும்பால் அலர்ஜி இருக்கும்பட்சத்தில், அந்தக் குழந்தை தாய்ப்பாலும் குடித்துக் கொண்டிருந்தால், குழந்தையின் தாயும் பசும்பாலைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம்.
குழந்தைக்கு ஃபார்முலா ஃபீட் எனப்படும் செயற்கை பால் கொடுக்கும் பட்சத்தில், அதிலுள்ள புரதங்கள் உடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படுவதால் பசும்பால் மாதிரி அலர்ஜியை ஏற்படுத்தாது. ஆனால் குழந்தைக்கு ஃபார்முலா ஃபீட் கொடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம்.
குழந்தைப் பருவத்தில் பால் அலர்ஜி இருப்பதால் அது அதன் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று அர்த்தமில்லை. வளர வளர, மெள்ள மெள்ள பால் மற்றும் பால் உணவுகளை குழந்தைக்கு கொடுக்கத் தொடங்கலாம். அது குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவார்.
இதைத் தாண்டியும் குழந்தைக்கு பால் கொடுப்பது தொடர்பாக உங்களுக்கு குழப்பங்கள் நீடித்தால், குழந்தைநல மருத்துவரிடம் பேசுங்கள். குழந்தையின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கேற்றபடியான உணவை அவர் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.