1991-லேயே எனக்குத் திருமணம் ஆயிட்டு. மனைவி சங்கரேஸ்வரி, டீச்சர் ட்ரைனிங் முடிச்சிருந்ததால், 1997-ல் அவருக்கு அரசுப்பள்ளி ஆசிரியையா வேலை கிடைச்சுச்சு. ஆனால், நான் அப்பவும் பைக் வாங்கலை. அப்போ, கரூர் டவுன்ல குடியிருந்தோம். தினமும் ரேஷன் கடை, மதியம் சாப்பாட்டுக்கு வீடு வர, மறுபடியும் கடைக்குப் போக, மாலை வீடு திரும்பன்னு சைக்கிளை மட்டுமே யூஸ் பண்ணினேன். இதனால், என்னோட மனசும் உடம்பும் புத்துணர்ச்சியா இருந்துச்சு. விபத்தால ஏற்பட்ட முதுகுவலியும் இதனால படிப்படியா குறைஞ்சுச்சு. தினமும் 10 கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்டுவேன். அதன்பிறகு, கடந்த 2007-ம் ஆண்டு தான்தோன்றிமலைக்குக் குடிபெயர்ந்தோம். அப்போ, எல்.ஜி.பி நகர், குளத்துப்பாளையம் ரேஷன் கடைகளுக்குப் பணி போடுவாங்க. அப்போ, தினமும் 10 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிள் மிதிச்சுப் பயணிப்பேன்.
தொடர்ந்து, 2012-ல் இருந்து இப்போ வரை காந்திகிராமத்துல குடியிருக்கிறோம். கடந்த 2019-ல் அரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். அதன்பிறகு, கடந்த மூணு வருஷமா தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துல கேஷியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இப்போ, காலையில் அலுவலகம் செல்வது, அலுவலகத்திலிருந்து வங்கிக்கு இருமுறை செல்வது, மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவதுன்னு தினமும் குறைந்தது 15 கிலோமீட்டர் தூரம் சைக்கிள்ல பயணிக்கிறேன். இதைத்தவிர, விடுமுறை நாள்களில் கடைகளுக்கு சாமான் வாங்கச் செல்வது, ஜவுளிக்கடைகளுக்கு ஜவுளி எடுக்கச் செல்வது, மருத்துவமனைகளுக்குச் செல்வது என எல்லாம் இந்த சைக்கிளில்தான். வெளியூருக்கு, உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குப் போக மட்டும் பஸ், ஆட்டோன்னு பயன்படுத்துவேன்.