நாட்டில் பல்வேறு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அதனை மத்திய அரசு ஏற்று நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததையடுத்து, ‘கொலிஜியம் பறித்துரைத்ததும் அதை 3-4 வாரங்களுக்குள் ஏற்று நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியம் பரித்துரைத்திருக்கும் பெயர்களில் அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதன் காரணத்தை குறிப்பிட்டு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்’ ‘ என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது எனச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், `உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு அசாதாரணமான தாமத போக்கை கடைபிடிக்கிறது. கொலிஜியம் பரித்துரையின் மீதும் முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த விவகாரத்திற்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், “நீதிபதிகள் காலியிடங்கள் நிரப்பப்படுவதற்கு உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு கால உச்சவரம்பை (3-4 வாரங்கள்) நிர்ணயம் செய்து, அது நடைமுறையில் இருக்கிறது. இந்த கால உச்சவரம்பு முறையாக பின்பற்றப்பட வேண்டும்.