பட மூலாதாரம், Getty Images
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தெருநாய்கள் வழிப்போக்கர்களைப் பார்த்துக் குரைப்பது, இருசக்கர வாகனங்களைத் துரத்துவது, நடந்து செல்வோரை திடீரெனத் தாக்குவது குறித்து இந்தியா முழுவதுமே பரவலாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
அதிகாரபூர்வ கண்காணிப்புத் தரவுகள், இந்தப் பிரச்னை வெகுவாக அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், 2022இல் 21,89,909, 2023இல் 30,52,521, 2024இல் 37,15,713 என்கிற அளவில் நாய்க்கடி சம்பவங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
2024ஆம் ஆண்டில் மட்டும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே 5,19,704 நாய்க்கடி சம்பவங்கள் நிகழ்ந்ததாக அரசாங்க தரவுகள் கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பின் தரவுகள்படி, இந்தியாவில் பதிவாகும் ரேபிஸ் மரணங்களில் 30% முதல் 60% வரை 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே உள்ளனர்.
“நாய்களின் திடீர் ஆக்ரோஷ நடத்தைகளுக்குப் பல்வேறு காரணிகள் இருக்கலாம்,” என்று பிபிசி தமிழிடம் பேசியபோது குறிப்பிட்டார் புடாபெஸ்டில் இருக்கும் எட்வாஸ் லோராண்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, நடத்தையியல் துறை பேராசிரியர் எனிகோ குபினி.
இதில் மரபியல், சமகால வாழ்வியல் சூழல் ஆகிய இரண்டின் பங்கையும் தனித்தனியாக தெளிவாகப் பிரித்தறிய முடியாது எனக் கூறிய அவர், “மன அழுத்தம் அல்லது பயத்திற்கான உணர்திறன் அளவில் மரபியல் வேறுபாடுகள் தாக்கம் செலுத்தக்கூடும். அதேநேரம், இந்தப் போக்குகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை அவை எதிர்கொண்ட அனுபவங்கள் தீர்மானிக்கின்றன” என்றார்.
உண்மையில், நமக்கு நன்கு பரிச்சயமான நாய்களேகூட எதிர்பாராத தருணங்களில் திடீரெனத் தாக்குவது ஏன்? அத்தகைய தருணங்களில் ஒருவர் எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது?
பட மூலாதாரம், Getty Images
5,000 ஆண்டுக்கு முன் மாறத் தொடங்கிய நாய்களின் மூளை
கடந்த ஏப்ரல் மாதம் ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், நிபுணர்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்த நாய்களின் மூளை அளவுடன், நவீனகால நாய்களின் மூளை அளவை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்.
“5,000 ஆண்டுகளுக்கு முன்பே நாய்களின் மூளை அளவு சுருங்கத் தொடங்கியது நிறுவப்பட்டது,” என்று தொல்லுயிரியலாளர் தாமஸ் குச்சி மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் தங்களது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆய்வின்போது, சுமார் 35,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, மிகவும் பழமையான இரண்டு ‘புரோட்டோ நாய்களின்” (protodogs) மூளைகள், அதே காலகட்டத்தில் வாழ்ந்த ஓநாய்களின் மூளை அளவில் இருந்து பெரிய வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இருப்பினும், “சுமார் 5,000 முதல் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கற்காலத்தின் பிந்தைய காலத்தில் வாழ்ந்த நாய்களுடைய மண்டையோட்டின் உள்பகுதி கன அளவுகள், சமகால ஓநாய்களைவிட ஏறத்தாழ 46% சிறியதாக இருந்ததை,” இந்த ஆய்வு காட்டுகிறது.
“மூளை அளவில் ஏற்பட்ட இந்தக் குறைவுடன் நிகழ்ந்த மூளை மறுசீரமைப்பு, தம்மைச் சுற்றியுள்ள சூழலில் நிகழும் மாற்றங்கள் குறித்த அதிக கவலையும் எச்சரிக்கை உணர்வும் கொண்டதாக நாய்களை உருவாக்கியிருக்கலாம்,” என்று தாமஸ் குச்சி மற்றும் அவரது ஆய்வுக் குழு கணித்துள்ளது.
அதாவது, “அறிமுகமில்லாத மனிதர்களோ அல்லது வேட்டை விலங்குகளோ நெருங்கும்போது குரைத்து, எச்சரிக்கை செய்யும் விலங்குகளாக அவை செயல்படத் தொடங்கியிருக்கலாம். இது அவற்றை குடியிருப்புப் பகுதிகளில் மதிப்புமிக்க வளர்ப்பு உயிரினமாகக் கருத வித்திட்டிருக்கலாம்,” என்று இந்த ஆய்வுக் குழுவில் ஒருவரான பேராசிரியர் குபினி கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
‘ஆக்ரோஷம் ஒரு தனித்த பண்பு அல்ல’
பேராசிரியர் குபினியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பேசிய நாய்கள் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி, “நாய்கள் மனிதர்களால் பழக்கப்படுத்தப்படுவது தொடங்கிய காலகட்டத்தில், அவை ஓநாய்களை ஒத்த தீவிரத்தன்மை, ஆக்ரோஷம், தற்காப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்ததாக” கூறுகிறார்.
ஏனெனில், “காட்டில் உணவுக்காக வேட்டையாட வேண்டும், இனச்சேர்க்கை முறையும் வன்முறை நிறைந்ததாக இருக்கும், குட்டிகளைப் பாதுகாக்க தீவிர எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஆனால், ஒரு வளர்ப்பு நாயாக, மனிதர்களைச் சார்ந்திருக்கத் தொடங்கும்போது அத்தகைய கடின உழைப்பு தேவைப்படவில்லை. எனவே, மூளையின் அளவும் அதற்கேற்ப சுருங்கவே செய்யும்,” என்று விவரித்தார்.
பேராசிரியர் எனிகோ குபினியின் கூற்றுப்படி, “நவீனகால நாய்களின் மூளை அளவுக்கும் அவற்றின் நடத்தைகளுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் சிக்கலானது. மூளை அளவு சிறிதானதால் அவற்றுக்கு ஆக்ரோஷம் அதிகம் என்று எளிதில் கூறிவிட முடியாது.”
“ஆக்ரோஷம் என்பது ஒரு தனித்த பண்பு அல்ல. அச்சம், வலி, உணவு இருப்பைப் பாதுகாத்தல், எல்லை உணர்வு, இனப்பெருக்கப் போட்டி, ஆபத்து குறித்த பதற்றம் ஆகியவற்றின் விளைவாக அது ஏற்படலாம்” என்று அவர் விளக்கினார்.

நாய்களின் மூளை வடிவமைப்பில் நிகழ்ந்த மாற்றங்கள்
மூளையின் அளவு சிறிதாவதாலேயே, நாய்களின் புத்திசாலித்தனம் குறைந்து, அதிக ஆக்ரோஷம், குறைந்த சமூகப் பண்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று நேரடியாகக் கூறிவிட முடியாது என்று குறிப்பிடுகிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி.
ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் ஆய்விதழில் வெளியான ஆய்வின்படி, “மூளையின் பகுதிகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை திறன்களுக்குக் காரணமாக அமைகின்றன. பழக்கப்படுத்துதல் என்பது நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டை வெறுமனே குறைப்பதற்குப் பதிலாக அதை மறுசீரமைக்க வழிவகுக்கலாம்.”
அத்தகைய மாற்றங்களின் விளைவாக, காட்டில் இருந்ததைப் போன்ற தீவிரமான ஆக்ரோஷமும், எச்சரிக்கை உணர்வும் வளர்ப்பு நாய்களிடையே தேவைப்படவில்லை என்றாலும், தெருநாய்களைப் போன்றவை நீடித்த பதற்றம், அச்ச உணர்வு ஆகியவற்றுடன், கூட்டமாக இணைந்து செயல்படும் குணங்களையும் தற்போது வரை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார் ஸ்ரீதேவி.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் நியூரோசயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வுக்கட்டுரையில், நரம்பியல் விஞ்ஞானி எரின் ஹெக்ட் மற்றும் அவரது குழுவினர் 33 இனங்களைச் சேர்ந்த 62 நாய்களை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து, வாசனை மூலம் வேட்டையாடும் திறன், காவல் காத்தல், தோழமை உள்ளிட்ட நடத்தை சார்ந்த சிறப்புத் திறன்களுடன் அவற்றின் மூளை அமைப்புகளில் ஏற்பட்டிருந்த மாறுபாடுகள் ஒத்துப் போவதைக் கண்டறிந்தனர்.
உடல் அளவு, மண்டை ஓட்டின் வடிவம் ஆகியவற்றையும் தாண்டி, குறிப்பிட்ட பணிகளுக்காக மனிதர்கள் மேற்கொண்ட தேர்வுகள், நாய்களின் மூளை அமைப்பை மறுவடிவமைப்பு செய்துள்ளதை இந்தக் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுவதாக ஸ்ரீதேவி குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
நாய்களின் ஆக்ரோஷமான நடத்தைக்கு என்ன காரணம்?
இந்தோனீசியாவின் பாலி தீவில் வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த, சுதந்திரமாகத் திரியும் தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்ப்புப் பிராணிகளாக இருக்கும் நாய்களின் வாழ்வியலை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வை பேராசிரியர் குபினி சுட்டிக்காட்டினார்.
அந்த ஆய்வில், ஒப்பீட்டளவில் குறைவான சுறுசுறுப்புடன், எளிதில் கிளர்ச்சியடையக் கூடியவையாக, வளர்ப்புப் பிராணிகளைவிட மனிதர்களைத் துரத்தும் வாய்ப்பு குறைவாக இருக்கும் வகையில் தெருநாய்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
அதேவேளையில், “ஒரு குறிப்பிட்ட தெருநாயைப் பொறுத்தவரை, அதன் உடனடி மற்றும் வளர்ச்சி சார்ந்த சூழல்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம். வலி, காயம், நோய், பசி, உணவுக்கான போட்டி, துன்புறுத்தல், அது எதிர்கொண்ட மோசமான ஆரம்பக்கால அனுபவங்கள், மனிதர்களுடனான அச்சுறுத்தும் எதிர்கொள்ளல்கள் ஆகிய அனைத்துமே அதன் நடத்தையைப் பாதிக்கக்கூடும்,” என்று பேராசிரியர் குபினி விளக்கினார்.
அவரது கூற்றுப்படி, “வீட்டு வளர்ப்பு ஒரு நாயின் பரிணாமப் பின்னணி குறித்த புரிதலை வழங்குகிறது. ஆனால் தெருநாயின் நடத்தை, ஒரு குறிப்பிட்ட சந்திப்பில், அதன் தனிப்பட்ட வரலாறு மற்றும் உடனடி சமூக, சூழலியல் நிலைமையைப் பெரிதும் சார்ந்திருக்க வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்.

பரிச்சயமான நாய்களே திடீரெனத் தாக்குவது ஏன்?
ஒரு நாயின் பொதுவான இயல்பை, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது வெளிப்படுத்தும் நடத்தையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமெனக் கூறுகிறார் பேராசிரியர் குபினி.
அவரது கூற்றுப்படி, “பல ஆண்டுகளாக மனிதர்களுடன் அமைதியாக வாழ்ந்த ஒரு நாய்கூட, சூழ்நிலைகள் மாறும்போது ஆக்ரோஷமாக நடந்து கொள்ளக்கூடும்.”
பொதுவாகவே சகிப்புத்தன்மை கொண்ட ஒரு நாய்கூட, காயமடைந்தாலோ, நோய்வாய்ப்பட்டாலோ, பசியாக இருந்தாலோ அல்லது அச்சத்தில் இருந்தாலோ தற்காப்பு உணர்வுடன் செயல்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
“ஆக்ரோஷம், பதற்றம், பயம், விழிப்புணர்வு போன்ற மரபார்ந்த இயல்புகள் வீட்டு விலங்குகளாக, சமூக விலங்குகளாக மாற்றப்பட்டுவிட்டதால் முழுமையாக மறைந்துவிடுவதில்லை,” என்று ஸ்ரீதேவி கூறினார்.
“நாய்களில் ஆக்ரோஷத்தின் அளவு ஓநாய்களைவிடக் குறைவாக இருக்கலாம், அதற்காக அந்தப் பண்பு முற்றிலுமாக மறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல,” என்று கூறிய அவர், “அது எவ்வளவு தீவிரமாக வெளிப்படுகிறது என்பது, நாய்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்கள் மற்றும் நிலைமைகளைப் பொறுத்தது” என விளக்கினார்.
ஆகையால், ஒரு பரிச்சயமான குடியிருப்புவாசிக்கு திடீரென நிகழும் செயலாகத் தோன்றும் ஒரு தாக்குதல், அவர் எதிர்கொள்ளும் நாய் அல்லது நாய்களில் நடக்கும், நம் கண்களுக்குப் புலப்படாத உடல் அல்லது உணர்ச்சி மாற்றத்தால் தூண்டப்பட்டு இருக்கலாம் என்று பேராசிரியர் குபினி குறிப்பிடுகிறார்.
கடந்த 2021இல் ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ ஆய்விதழில், சல்லா மிக்கோலாவும் அவரது குழுவும் 9,270 வளர்ப்பு நாய்களின் நடத்தைகளைப் பகுப்பாய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டனர். அந்தப் பகுப்பாய்வு, அவற்றின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு மனிதர்கள் மீதான அச்சமே மிக வலுவான தொடர்பைக் கொண்டிருப்பதைக் காட்டியது.
பொதுவாக, அச்சமில்லாத நாய்களுடன் ஒப்பிடுகையில், அதிகமாக அஞ்சக்கூடிய நாய்களிடம் எதிர்பாராத ஆக்ரோஷமான நடத்தைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்பு ஐந்து மடங்குக்கும் அதிகமாக இருப்பதாகவும் அதில் தெரிய வந்தது.
வயது, பாலினம், உடல் அளவு, இனம், அவற்றின் இருப்பிடச் சூழல் ஆகியவையும் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் தொடர்புடையவாக இருப்பதாக அந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
குழு மனப்பான்மையும் நகர்ப்புற அழுத்தங்களும்
உணவு கிடைக்கும் தன்மை, மனித இடையூறுகள், பிற நாய்களுடனான போட்டி ஆகியவற்றில் நிகழும் மாற்றங்களால் ஏற்படும் அழுத்தம் தெருநாய்களின் நடத்தைகளில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தக்கூடும் என்று பேராசிரியர் குபினி கூறினார்.
உணவு கிடைக்கும் அளவு குறையும்போது அல்லது குப்பைக் கூளங்கள் மறையும்போது, நாய்கள் அறிமுகமில்லாத பகுதிகளுக்குள் நுழையும் சூழல் ஏற்படும். அப்போது அவற்றுக்கு இடையிலான போட்டி மேலும் தீவிரமடையும்.
“நாய்களுக்குள் ஏற்பட்ட உயிரியல் மாற்றங்களைவிட, அவை எதிர்கொள்ளும் சூழல்களும் மனித-நாய் தொடர்புகளில் நடக்கும் எதிர்மறை விளைவுகளும், அவற்றின் ஆக்ரோஷமான நடத்தைகளாகப் பிரதிபலிக்கின்றன” என்றும் குபினி விவரித்தார்.
நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவியின் கூற்றுப்படி, அவற்றின் குழுவாகச் செயல்படும் நடத்தை ஒரு மோதலை மிகவும் ஆபத்தானதாக மாற்றக்கூடும். “சமூகத் தூண்டுதல் மூலம், ஒரு நாயின் செயல்கள் பிற நாய்களிடமும் அதேபோன்ற நடத்தையை ஊக்குவிக்கலாம். தனியாக இருக்கையில் தாக்காத ஒரு நாய், மற்றொரு நாய் குரைக்க, துரத்த அல்லது கடிக்கத் தொடங்கிய பிறகு அதனுடன் கூட்டு சேர்ந்து கொள்ளலாம்” என்றார் அவர்.
“இதன் விளைவாக, தனியாக இருக்கையில் தாக்காத ஒரு நாய், சில சூழ்நிலைகளில் குழுத் தாக்குதலில் பங்கேற்கலாம்,” என்று பேராசிரியர் குபினி கூறினார்.
சுதந்திரமாகத் திரியும் தெருநாய்கள் உணவு, இனப்பெருக்கம், வாழ்விடம், பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் போட்டியை எதிர்கொள்வதாக ஸ்ரீதேவி குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, “பலவீனமான அல்லது எளிதில் எதிர்வினையாற்றும் ஒருவரைச் சுற்றி நாய்கள் கூடும்போது, ஆக்ரோஷம் தீவிரமடையலாம்; இருப்பினும், எல்லா நாய்க் கூட்டங்களையும் ஆபத்தானவை என்று கூறிவிட முடியாது.”
பட மூலாதாரம், Getty Images
ஆக்ரோஷமான நாய்களை எப்படி சமாளிப்பது?
இந்த விஷயத்தில் வளர்ப்பு நாய்களில் இருந்து தெருநாய்கள் சற்று மாறுபட்டவை என்கிறார் ஸ்ரீதேவி. “தெருநாய்கள் பிழைத்திருக்க அனுதினமும் பல்வேறு போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதோடு, அவை தத்தமது தேவைகள் மற்றும் பாதுகாப்பு கருதி, ஒரு கூட்டமாகச் செயல்படுவதில் கவனம் செலுத்துகின்றன. எனவே, தங்களை வழிநடத்தும் ஒரு வலிமையான நாயின் தலைமையில் தெருநாய்கள் கூட்டமாக இருக்கையில், அவற்றின் ஆக்ரோஷ மனப்பான்மை சற்று தீவிரமாக இருக்க வாய்ப்புள்ளது.”
“சுதந்திரமாக உலவும் வாழ்க்கை முறை அல்லது மூளையின் அளவு குறைந்தது போன்ற ஏதேனும் ஒரு காரணத்துடன் மட்டுமே இத்தகைய நிகழ்வுகளைத் தொடர்புபடுத்த முடியாது” என்று கூறும் குபினி, “நாய்களின் திடீர்த் தாக்குதல்களுக்கு வித்திட்ட, குறிப்பிட்ட தூண்டுதல் காரணியை அடையாளம் காணப் போதுமான தகவல்கள் பல நேரங்களில் நம்மிடம் இருப்பதில்லை,” என்றார்.
குட்டிகளைப் பாதுகாப்பது, உணவுப் பற்றாக்குறை, மனிதர்கள் உடனான அதன் முந்தைய மோசமான அனுபவம் எனப் பல்வேறு காரணிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட ஸ்ரீதேவி, “அவற்றில் ஏதோவொன்று, நாய்கள் பலநாள் பார்த்துப் பழகிய மனிதர்களிடமேகூட ஆக்ரோஷமாக நடந்துகொள்ள வழிவகுக்கலாம்” என்று விளக்கினார்.
அடிப்படையில், “நாய்களின் நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றம் அவற்றின் மூளை அளவைக் குறைத்திருந்தாலும், அவற்றுடைய மரபணுவில் ஆக்ரோஷம், பயம், எச்சரிக்கை உணர்வு போன்றவை நீடிக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றின் தீவிரம் எந்த அளவுக்கு வெளிப்படுகிறது என்பது நாய்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்களைச் சார்திருக்கிறது,” என்றும் ஸ்ரீதேவி விவரித்தார்.
ஒருவேளை அத்தகைய எதிர்பாராத ஆக்ரோஷமான நடத்தைகளை நாய்கள் வெளிப்படுத்தும் நிலையில் யாரேனும் சிக்கிக் கொண்டால், “அவர்கள் முதலில் அச்சத்தை வெளிப்படுத்தாமல், சாதுர்யமாக அங்கிருந்து விலகிச் செல்லவும், தங்களைத் தற்காத்துக் கொள்ள கையில் ஒரு பொருள் இருப்பதை அவர்கள் எதிர்கொள்ளும் நாய்களுக்கு தெரியப்படுத்தவும் வேண்டும். அது பை, ஹெல்மெட், குச்சி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது அவற்றின் ஆக்ரோஷமான அணுகுமுறை தணிந்து, மனிதர்களிடம் இருந்து அவை விலகிச் செல்ல வழிவகுக்கும்,” என்று அறிவுறுத்துகிறார் ஸ்ரீதேவி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு