ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதன் மூலம், 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார். இவர் இந்த சீசனில் மட்டும் 26 விக்கெட்களை வீழ்த்தி, பர்ப்பிள் கேப்பையும் தன் வசம் வைத்துள்ளார்.

போட்டிக்குப் பின்னர் பேசிய புவனேஸ்வர் குமார் கூறியதாவது:
“இந்த வெற்றிக்கான பெரும்பாலான பாராட்டு, திரைக்குப் பின்னால் உழைக்கும் குழுவினருக்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
நானும் ஹேஸில்வுட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது ஒரு விஷயம். ஆனால் குழுவினர் கொண்டு வரும் சிறிய, சிறிய டேட்டாக்களும் மிகவும் உதவியாக இருக்கின்றன. சில நேரங்களில் அவற்றை நாம் கவனிக்காமல் விடலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால், அது அணிக்கு நல்ல பலன் தரும்.
முதல் போட்டியிலிருந்தே நாங்கள் இதைச் செய்து வருகிறோம். நாங்கள் தரவுகளை அடிப்படையாக வைத்து செயல்படுகிறோம் என்று சொல்லலாம். புதிய விஷயங்கள் ஏதாவது இருந்தால், அதைக் கவனித்து அதற்கேற்ப எங்களை மாற்றிக்கொள்ள முயற்சிப்போம். ஆனால் 100 சதவீதம் தரவுகளையே நம்பி இருக்க மாட்டோம். இருந்தாலும் அது உதவியாக இருக்கிறது.

பந்துவீச்சு திட்டங்கள் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதி. திட்டத்திற்கு வெளியே சிறிது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பந்துவீசினால், அது பவுண்டரிக்குச் செல்லும். அதனால் பேட்ஸ்மேன்களுக்கு இடம் கொடுக்காமல், LBW மற்றும் போல்டு அவுட்களை பெறும் வகையில் பந்துவீச முயற்சித்தோம். அது எங்கள் திட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்தது” என்று பேசியிருந்தார்.