பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எட்டாவது முறையாக வீழ்த்தியது இந்தியா.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொழும்புவில் நடந்த இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்த இரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் பெறப்பட்டிருக்கும் வெற்றி இதுதான்.
தேர்ந்தெடுத்து தெளிவாக ஆடிய இஷான் கிஷன்
இந்திய அணியின் வெற்றியில் இஷான் கிஷனின் பேட்டிங் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக விளையாடிய அவர், 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் முதல் ஓவரின் முடிவில் இந்தியா 1/1 என்ற நிலையில் இருந்தது. ஆனால், எந்தவித நெருக்கடியையும் உணராமல் தன் வழக்கமான அதிரடி பாணியில் ஆடினார் இஷான் கிஷன். அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த அடுத்த பந்தே, ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் அவர் சிக்ஸர் அடித்தார்.
அப்ரார் அஹமது பந்துவீச வந்தபோதும் அதேபோல் அவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார் இஷான். அப்ரார் அஹமதுவின் அடுத்த ஓவரிலும் அதேபோல் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். சொல்லப்போனால், அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளிலுமே அவர் பவுண்டரிகள் அடித்தார். சதாப் கான் வந்தபோதும் அதுவே நடந்தது. அவர் வீசிய முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்தார் இஷான்.
அதேசமயம் இஷான் வெறுமனே அடித்து மட்டும் ஆடவில்லை. அவர் அடிக்கவேண்டிய பந்துகளை தேர்ந்தெடுத்து ஆடினார். லெக் ஸ்பின்னர்கள் நன்கு ‘ஃப்ளைட்’ (flight) கொடுத்து வீசிய பந்துகளை சிறப்பாக ஸ்வீப் செய்தார். சில பந்துகளை அதன் வேகத்தைப் பயன்படுத்தி தேர்ட் மேன் திசைக்கும் அனுப்பி பவுண்டரியாக்கினார்.
ஆனால், ஆஃப் ஸ்பின்னர்கள் அவருக்கு பந்தை வெளியே எடுத்துச் சென்றபோது கவனமாகவே எதிர்கொண்டார். நிறைய சிங்கிள்களும், டபுள்களுமே கூட எடுத்தார். ஸ்டம்பை நோக்கி ஆஃப் ஸ்பின்னர்கள் வீசியபோது டிஃபன்ஸிவாகவும் ஆடினார்.
பட மூலாதாரம், Getty Images
அவருடைய முதல் 37 பந்துகளில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளில் அவர் வைத்திருந்த ஸ்டிரைக் ரேட் 120 தான். அதுவே, அதே காலகட்டத்தில் லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளில் அவர் வைத்திருந்த ஸ்டிரைக் ரேட் 257! இப்படி தன்னுடைய ‘லைன்’-ஐ தேர்ந்தெடுத்து ஆடினார் அவர்.
இதன் காரணமாகத்தான் கடினமான ஆடுகளமாகக் கருதப்பட்ட இதில் அவரால் ஒரு பெரிய அதிரடியான இன்னிங்ஸை ஆட முடிந்தது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு அனைத்து விமர்சகர்களும் வல்லுநர்களும் சொன்னது: ‘இந்திய அணி 160-170 ரன்கள் வரை எடுத்தால் அதுவே நல்ல ஸ்கோராக இருக்கும்’. ஓவருக்கு 8-8.5 என்ற ரன்ரேட்டில் இந்தியாவின் இன்னிங்ஸ் முடியவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கும் மேலாக இந்தியாவின் ஸ்கோரை எடுத்துச் சென்றிருந்தார் இஷான். அவர் அவுட்டானபோது இந்தியாவின் ரன்ரேட் 10.15. இந்தியா 88 ரன்கள் அடித்திருந்ததில், அவரே 77 ரன்கள் எடுத்திருந்தார்.
இஷான் அவுட் ஆனபிறகு இந்தியாவால் அதே வேகத்தில் ஆட முடியவில்லை. ஆடுகளத்தின் தன்மை இந்திய பேட்டர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்திருந்தாலும் அதற்கு அவர் 29 பந்துகள் எடுத்துக்கொண்டார். துபே மட்டும் கடைசி கட்டத்தில் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதனால் இந்திய அணி 175 என்ற ஸ்கோரை எட்டியது.
சவால் கொடுத்த சயிம் அயூப்
இந்தப் போட்டியில் இந்திய பேட்டர்களுக்கு பாகிஸ்தானின் சயிம் அயூப் ஆஃப் ஸ்பின் மூலம் பெரும் சவால் கொடுத்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என அனைத்துமே பெரிய விக்கெட்டுகள்.
இந்த உலகக் கோப்பை தொடரின் முதலிரு போட்டிகளிலும் தலா 1 ஓவர் மட்டுமே வீசியிருந்தார் அவர். ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணியில் நிறைய இடது கை பேட்டர்கள் இருந்ததால், ஆஃப் ஸ்பின்னரான அவரை பாகிஸ்தான் கேப்டன் அதிகமாகவே பயன்படுத்தினார்.
பெரும்பாலும் ‘அரௌண்ட் தி ஸ்டம்ப்’ வந்து ஸ்டம்ப் லைனில் சீராக வீசிக்கொண்டே இருந்தார் சயிம் அயூப். அதன் பலனாக ரன்கள் கட்டுக்குள் இருந்ததோடு விக்கெட்டுகளும் கிடைத்தன.
ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே பந்துவீச வந்த அவர் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்து ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் அவர் 11 ரன்கள் கொடுத்தார். ஆனால், அதில் ஒரு வாய்ப்பை அவர் உருவாக்கினார். அபிஷேக் ஷர்மா போலவே இஷானும் மிட் ஆனில் கேட்ச் ஆகியிருப்பார். ஆனால், பந்து ஷஹீன் அஃப்ரிடிக்கு சற்று மேலே சென்றதால் அவர் தப்பித்தார்.
பட மூலாதாரம், Getty Images
அதன் காரணமாக பவர்பிளேவுக்குப் பிறகும் சயிமைப் பயன்படுத்தினார் சல்மான் அகா. அதற்குப் பலனும் கிடைத்தது. ஒன்பதாவது ஓவரில், அவர் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தை தவறவிட்ட இஷான் கிஷன் போல்டானார். அவரது அடுத்த ஓவரில் (ஆட்டத்தின் 15-வது ஓவர்) அதேபோல் ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை ஸ்வீப் செய்த திலக் வர்மா, பந்தைத் தவறவிட்டு எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஹர்திக் பாண்டியாவை கேரம் பால் வீசி ஏமாற்றிய சயிம், அவரை முதல் பந்திலேயே வெளியேற்றினார்.
சயிம் அயூப் எடுத்த விக்கெட்டுகளின் காரணமாக இந்தியாவின் ரன்ரேட் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. இவர் கிஷனை வெளியேற்றியபோது இந்தியாவின் ரன்ரேட் 10.15 ஆக இருந்தது. ஆனால், அவரது 4 ஓவர்கள் முடிவடைந்தபோது இந்தியாவின் ரன்ரேட் 8.47 ஆக குறைந்துவிட்டிருந்தது.
தனி வழியில் பயணித்த இந்தியா
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே இலங்கை ஆடுகளங்களில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று பேசப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் ஆடுகளத்தைப் பார்த்துவிட்டு இரு அணிகளுமே ஸ்பின்னர்களாக பிளேயிங் லெவனில் அதிகம் எடுத்துவைத்திருந்தன.
இந்தியா பேட்டிங் செய்தபோது பாகிஸ்தான் அணி 18 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே பயன்படுத்தியது. ஷஹீன் அஃப்ரிடி மட்டுமே 2 ஓவர்கள் பந்துவீசியிருந்தார். அவர் அந்த இரு ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆப்ஷனான ஃபஹீம் அஷ்ரஃப் பாகிஸ்தான் கேப்டனால் பயன்படுத்தப்படவில்லை. சல்மான் அகா, சயிம் அயூப், அப்ரார் அஹமது, முகமது நவாஸ், சதாப் கான், உஸ்மான் தாரிக் என 6 ஸ்பின்னர்கள் மீதமிருந்த 18 ஓவர்களை வீசினார்கள். ஆஃப் ஸ்பின்னரான சல்மான் அகா தானே முதல் ஓவரைப் பந்துவீச வந்திருந்தார்.
ஆனால், இந்திய அணி பாகிஸ்தானின் பாணியில் பயணிக்கவில்லை. எப்போதும் போல் ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா இருவருமே ஸ்பெல்லைத் தொடங்கினார்கள். அவர்கள் இருவருமே தங்கள் லைன் மற்றும் லென்த்தை சரியாக வைத்திருந்தார்கள். அதனால், முதலிரு ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன.
சஹிப்சதா ஃபர்ஹானுக்கு ஹர்திக் தொடர்ந்து மூன்று டாட் பால்கள் வீச, பொறுமை இழந்த ஃபர்ஹான் நான்காவது பந்தைத் தூக்கி அடித்து கேட்சானார். தான் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் கொடுத்த பும்ரா, அடுத்த பந்தில் ஒரு இன்ஸ்விங் யார்க்கர் வீச, சயிம் அயூப் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவும் ஆட்டமிழந்தார். பும்ரா ‘பேக் ஆஃப் தி லென்த்’ வீசிய பந்தை அவர் தவறாகக் கணித்து தூக்கியடித்து ஆட்டமிழந்தார்.
முதல் நான்கு ஓவர்களையும் ஹர்திக் மற்றும் பும்ராவை வைத்தே முடித்தார் சூர்யா. அவர்கள் ஸ்பெல் முடியும்போது பாகிஸ்தானின் ஸ்கோர் 25/3. அந்த இடத்திலேயே பெருமளவு பின்தங்கியது அந்த அணி. அதிலிருந்து அவர்களால் மீண்டு வரவே முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் பேட்டர்களில் உஸ்மான் கான் மட்டுமே ஓரளவு பெரிய இன்னிங்ஸ் ஆடினார். அவர் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். மிடில் ஓவர்களில் இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பான லைன் மற்றும் லென்த்தில் தொடர்ச்சியாக வீச ரன் எடுப்பது அவர்களுக்கு சிரமமாக இருந்தது. அதனால், பெரிய ஷாட்கள் அடிக்க முற்பட்டனர். ஆட்டம் நடந்த பிரமதாசா ஸ்டேடியத்தில் பவுண்டரி எல்லை மிகவும் பெரியது என்பதால் அந்த ஷாட்களில் பெரும்பாலானவை இந்திய ஃபீல்டர்களின் கைகளிலேயே விழுந்தன.
இந்த வெற்றியின் மூலம், 6 புள்ளிகள் பெற்ற இந்திய அணி சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்தது. இந்தியா அடுத்த போட்டியில் 18-ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது. மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கும் பாகிஸ்தான், அதே நாளில் நமீபியாவுக்கு எதிராக ஆடுகிறது. அந்தப் போட்டியை வென்றால் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்யலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு