IND vs IRE | தீபக் ஹூடாவின் அதிரடி சதம் – இந்திய அணி 227 ரன்கள் குவிப்பு | IND vs IRE | By the help of Hooda ton, Samson fifty India scores 227

Share

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துகிறார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டி ‘தி வில்லேஜ்’ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஓப்பனிங் இணையாக இம்முறையும் இஷான் கிஷனுடன், தீபக் ஹூடா களம் கண்டார். இப்போட்டியில் 3வது ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணி முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. மார்க் அடைர் பந்தில் 3 ரன்களே எடுத்திருந்த இஷான் கிஷன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இன்றைய ஆடும் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் ஒன் டவுனாக இறங்கினார். இவரும் தீபக் ஹூடாவும் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.

அயர்லாந்து பவுலர்கள் எவ்வளவு முயன்றும், இவர்களை பிரிக்க முடியவில்லை. சஞ்சு சாம்சன், 31 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ய, மறுபுறம் அவருக்கு முன்னதாக தீபக் ஹூடா அரைசதம் கடந்தார். 3வது ஓவரில் இணைந்த இவர்கள் கூட்டணியை மார்க் அடைர் வந்தே பிரித்தார். அதுவும் 16.2 ஓவரில். அரைசதம் கடந்து 77 ரன்களை எடுத்திருந்த சஞ்சு சாம்சன் அடைரின் ஸ்லோ யார்க்கரில் போல்டாகினார்.

அதேநேரம் நிலைத்து ஆடிய தீபக் ஹூடா சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 55 டெலிவரிகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் விளாசி தனது முதல் சதத்தை எடுத்திருந்தார். இறுதி ஓவர் வரை நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18 ஓவரின் இறுதி பந்தில் 104 ரன்களுக்கு அவுட் ஆகினார். இதன்பின் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், லிட்டில் மற்றும் யங் தலா இரண்டு விக்கெட்டும் எடுத்தனர்.

டி20 போட்டியில் நான்காவது இந்திய பேட்ஸ்மேன்:

இன்றைய போட்டியில் சதம் எடுத்தன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார் தீபக் ஹூடா. இதற்கு கேஎல் ராகுல் இரண்டு முறையும், சுரேஷ் ரெய்னா மற்றும் ரோஹித் சர்மா தலா ஒரு முறையும் சதம் அடித்துள்ளனர். இவர்கள் வரிசையில் தீபக் ஹூடாவும் இணைந்துள்ளார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com