வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பது, வெள்ளரி விதைகளை ஊறவைத்த நீரையும் வெந்தயத்தை ஊறவைத்த நீரையும் குடிப்பது, பாகற்காய் ஜூஸ், அகத்திக்கீரையையும் காசினிக்கீரையையும் ஜூஸாக்கி குடிப்பது போன்றவை எல்லாம் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும்; நிரந்தரமாகக் குணமாக்கும் என்பது போன்ற வதந்திகள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
ஒருவேளை இவையெல்லாம் உண்மை என்கிற பட்சத்தில், நம்மூரில் சர்க்கரைநோய் என்ற ஒன்றே இருக்கக் கூடாதே வெண்டைக்காயும் வெந்தயமும் பாகற்காயும் நமக்கு ஆண்டுதோறும் கிடைப்பவைதான். அவற்றை உபயோகித்தால் யாருக்குமே சர்க்கரைநோயே இருந்திருக்கக் கூடாதே…
சர்க்கரைநோயாளிகள் பெரும்பாலும் மனரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அந்நிலையில், அவர்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், போலி மருத்துவர்கள், போலி விளம்பரங்கள் பகிரும் பொய்யான தகவல்களை உண்மையென நம்பி, பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.
நல்ல மருத்துவரின் ஆலோசனையோடு முறையான சிகிச்சையில் இருப்பவர்கள்கூட, இதுபோன்ற வதந்திகளை நம்பி, மருந்துகளை நிறுத்திவிடுவதையும் பார்க்கிறோம்.
அதன் விளைவாக ரத்தச்சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு, தலை முதல் பாதம் வரையிலான பல உறுப்புகளும் பாதிக்கப்படுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வெண்டைக்காயோ, வெந்தயமோ சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், சர்க்கரை நோய்க்கான முறையான சிகிச்சையோடு இவற்றையும் சாப்பிடலாம்.