தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் நேற்று ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யாவும், ப்ரப்சிம்ரன் சிங்கும் ஓப்பனிங்கில் களமிறங்கினர்.
பூரான் விட்டது கேட்ச் அல்ல… மேட்ச்!
லக்னோவுக்காக முதல் ஓவரை வீசிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மகாராஜ் சிங், முதல் ஓவரிலேயே, இந்த சீஸனின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஓப்பனர் பிரியான்ஷ் ஆர்யாவை விக்கெட் எடுத்து தனது அணிக்கு நல்ல மொமன்ட்டம் ஏற்படுத்திக்கொடுத்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஷ், எதுவுமே நடக்காதது போல் தான் சந்தித்த முதல் நான்கு பந்துகளை 4,6,6,6 என பறக்கவிட்டார்.

அவரைத்தொடர்ந்து, மற்றொரு ஓப்பனர் ப்ரப்சிம்ரன் தன் பங்குக்கு, 4-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அதிரடி காட்டினார். இந்த இடத்தில்தான் 5-வது ஓவரை வீசிய ஆகாஷ் மகாராஜ் சிங், அதிரடியாக பேட்டை சுழற்றிக்கொண்டிருந்த ஜோஷ் இங்கிலிஷை (14 பந்துகளில் 30 ரன்கள்) வீழ்த்தினார். அதன்பின்னர், ப்ரப்சிம்ரனுடன் கைகோர்த்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், முதல் பந்தையே பவுண்டரி அனுப்பி ரன் கணக்கைத் தொடங்கினார்.

அடுத்து, மேட்ச் டர்னிங் மொமென்ட்டுகள் ஏற்படும் பவர்பிளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் ஆவேஷ் கான். அதற்கேற்றாற்போலவே, அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே ப்ரப்சிம்ரனின் கேட்ச் வாய்ப்பு வந்தது. ஆனால், கைக்கு வந்த பெரிய கஷ்டமில்லாத கேட்சைத் தவறவிட்டார் பூரான். அந்த கேட்ச் டிராப் ஆனபோது பஞ்சாப்பின் ஸ்கோர் 58. மொத்தமாக பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் குவித்தது பஞ்சாப்.