பன்னிரு ராசிகளிலும் அதீத ஈர்ப்பும் வசீகரமும் பெற்ற உங்களின் கடக ராசிக்கு 4-ம் வீட்டில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.
1. நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். ராசிநாதன் சந்திரன், நான்காம் இடத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், நன்மையே நடக்கும். திறமைகள் வெளிப்படும். அடிமனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும்.
2. பல வகைகளிலும் மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழ வாய்ப்பு உண்டு. பெரிய முடிவுகளில் உங்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

3. ஏப்ரல் மாதத்தில் வாக்குஸ்தானத்துக்குக் கேது வருகிறார். வெளிப்படையான பேச்சு, வெள்ளந்தியான பேச்சுகளைத் தவிர்க்கவேண்டும். சிலருக்குக் கண் உபாதைகள் ஏற்படலாம். பார்வைத் திறனைப் பரிசோதிப்பது நல்லது.
4. எதன் பொருட்டும் எவருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம். கையிருப்புகள் கரையுமளவிற்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்குக் கண் எரிச்சல், பல்வலி வந்து நீங்கும்.
5. உங்களில் சிலர், மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்த வாய்ப்பு உண்டு மகனுக்கு இந்த வருட மத்தியில் நல்ல வேலை கிடைக்கவாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சூழல் அமைதி தரும்.
6. ஏப்ரல் மாதத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் ராகு பிரவேசிக்கிறார். அதுமுதல் திடீர்ப் பயணங்கள் உண்டு. சிலருக்கு மூச்சுப் பிரச்னை ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு ஊடல்கள் எழலாம். சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்.
7. ராகு எட்டில் மறைவதால் சில நன்மைகள் உண்டகும். வெற்றிக்கான இலக்குகள் புலப்படும். உங்கள் மனம் இனி அமைதியாகும். திசையறிந்து பயணிப்பீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் எல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும்.
8. தந்தையின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டதே! இனி ஆரோக்கியம் கூடும். தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும்.
9. உங்களைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் யாவரும் வியக்கும் படி சாதித்துக்காட்டுவீர்கள். தவறானவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, முன்னேற்றம் காண்பீர்கள். இனி நேர்பாதையில் பயணிப்பீர்கள்.

10, இந்த வருடம், மே 11-ம் தேதி முதல் 12-ம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குருபகவான். அதனால் இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. சுபச் செலவுகள் கூடும். அலைச்சல்களும் அதிகரிக்கும். தேவையற்ற குழப்பங்கள், வீண் சிந்தனைகள் மனதில் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
11. தொழிலில் ஏற்றம் உண்டாகும். சிலர், புதிய கிளைகள் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. சரக்குகள் கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுங்கள்.
12. உத்தியோகத்தில் சவால்கள் உண்டு என்றாலும் சமாளித்து மீள்வீர்கள். எதிர்பார்த்த சலுகைகளில் சில கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
13. பொதுக்காரியங்களில் இயன்ற பணிகளைத் தாராளமாகச் செய்யுங்கள். எனினும் முன்னே நிற்க வேண்டாம். தேவையில்லாமல் எவருக்கும் வாக்குறுதிகள் அளிப்பது கூடாது. உறவுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
14. விலையுயர்ந்த பொருள்கள், ஆபரணங்களைக் கவனமுடன் கையாளுங்கள். சுற்றுலாக்கள் செல்லும் வாய்ப்பு உண்டு. என்றாலும் பொது வாகனங்களில் செல்வது போன்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். கடன் விஷயங்களில் எவருக்கும் பரிந்துரை செய்யவேண்டாம்.
15. பஞ்சமி திதிநாளில் வராஹி அம்மனை வழிபடுவது விசேஷம். பிரதோஷக் காலத்தில் சிவாலயத்துக்கு அபிஷேகத் திரவியங்கள் வாங்கிக்கொடுத்து, வழிபாட்டில் கலந்துகொள்ளுங்கள்; தடைகள் நீங்கும்; வருமானம் உயரும்.