சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. போட்டியை ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், இந்திய நெட்பால் சம்மேளத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளர் செந்தில் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழாவில் ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் செயலாளர் யலமஞ்சி பிரதீப், துணைத்தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்காதேவி பிரதீப், பொருளாளர் சவுமியா கிஷோர், தமிழ்நாடு நெட்பால் சங்கத்தின் தலைவர் பி.செல்வராசு, ஆர்எம்கே உண்டு உறைவிட பள்ளி முதல்வர் ஷப்னா சங்க்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறுமியர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக அணி 25-4 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது. தமிழக அணியில் லக் ஷனா சாய் யலமஞ்சி 14 கோல்கள் அடித்து அசத்தினார்.
சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூரு
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ரியான் வில்லிம்ஸ் 2 கோல்களையும் (16 மற்றும் 68-வது நிமிடம்), சுனில் ஷேத்ரி (43-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.
சென்னையின் எஃப்சி சார்பில் இர்பான் யத்வாத் (19-வது நிமிடம்), லால்ரின்லியானா ஹனாம்தே (45-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 82-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் லால்டின்லியானா ரென்த்லே சுயகோல் அடித்தார்.