
`உலக மனநல தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நம் மனநலத்தை பாதிக்கூடிவை என்ன, அவற்றை எப்படிக் களைவது என்பது குறித்து அறிந்துகொள்வோம்…

நம்மை நம் இயல்பில் இருந்து கொஞ்சமாகவோ, முற்றிலுமாகவோ பிறழச் செய்யும் அக மற்றும் புறக் காரணிகளால், நமது உடலிலும் மனதிலும் உண்டாகும் மாற்றங்கள் நமக்கு ஸ்ட்ரெஸை ஏற்படுத்துகின்றன.

ஸ்ட்ரெஸ் கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படும் பட்சத்தில் காலப்போக்கில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பெரிது.

உறக்கமின்மை, பசியின்மை, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, மாதவிடாய் பிரச்னைகள் எனத் தொடங்கும் பட்டியல், மன உளைச்சல், கவனச்சிதறல், தன்னம்பிக்கையின்மை, தனிமை என்று நீளூம்.

நேரங்களில் தற்கொலை முயற்சிக்குக்கூட வழி வகுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மன அழுத்தத்துக்கான காரணங்கள் நபருக்கு நபர் மாறுபட்டாலும், அதிலிருந்து விடுபடுவதற்கான சில பொதுவான மற்றும் எளிய வழிமுறைகள் உள்ளன.

காரணமறிதல்: முதலில் நம் இயல்பைப் பாதித்து நம்மைப் பதற்றத்துக்கு உள்ளாக்குவது எது, எவை, யார் என்றறிவது அவசியம்.

திட்டமிடல்: திட்டமிட்டுத் தொடங்கப்படும் எந்த ஒரு நாளும், வேலையும் நல்ல பலனைத் தரும் என்கின்றனர் சாதனையாளர்கள். திட்டமிடும் பழக்கம் ஸ்ட்ரெஸை குறைக்க மிகவும் கைக்கொடுக்கும்.

ஒரு நேரத்தில் ஒரு வேலை: எல்லாவற்றையும் தொடங்கி எதையும் ஒழுங்காகச் செய்யாமல் இருந்தால் ஸ்ட்ரெஸ் கிர்ரென ஏறும். எனவே, `One step at a time’ எனும்படி ஒவ்வொரு வேலையாக அணுகி முடிப்பது மேல்.

உடற்பயிற்சி: வீட்டில் இருந்தபடி செய்யும் தேகப் பயிற்சிகள், யோகா, நடைப்பயிற்சிகள் போன்றவை நிச்சயமாகப் புத்துணர்வைத் தரும். மனதின் அழுத்தங்கள் நீங்கும்.

நல்லுணவு: உணவே மருந்து. தோன்றியபோது உணவு உண்ணுவதைத் தவிர்த்து, சீரான இடைவெளியில் சமச்சீர் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். துரித உணவுகளை தவிருங்கள்.

தட்டுங்கள் திறக்கப்படும்: மௌனத்தில் துன்பங்களை புதைக்காதீர்கள். ஒரு பிரச்னை என்றால் நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து ஆலோசனை கேளுங்கள். இது `Third eye view’ என்ற, நாம் இதுவரை அணுகாத ஒரு புதிய கோணத்தில், நம் பிரச்னையை அவர்கள் அணுகி தீர்வு காண உதவலாம்.

உங்களுக்கான நேரம்: மனதுக்கு உற்சாகம் அளிப்பதை செய்யுங்கள். இசை, நடனம், ஓவியம், இயற்கையுடன் நேரம் செலவழிப்பது என அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவ்வாறு ஒதுக்கிய நேரத்தில் உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். அல்லது ஒன்றுமே செய்யாமல் `சும்மாவே’கூட இருங்கள். அந்த சும்மா இருக்கும் நிமிடங்கள் `உங்களுக்கு மட்டுமே’ உரியது என்ற தெளிவுடன் இருங்கள்.
நிம்மதி உங்கள் சாய்ஸ்!