அப்போது அந்த ஓவரை யாஷ் தயாள் வீச, கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார் ரிங்கு சிங். இதன் காரணமாக யாஷ் தயாளை அடுத்தடுத்தப் போட்டிகளில் களமிறக்கவில்லை குஜராத் அணி. அவரும் உடல்நலப் பாதிப்பால் சில போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். அப்போது யாஷ் தயாளுக்கு ஆதரவாகப் பலரும் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் வகையில் யாஷ் தயாள், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.
இன்று காலை யாஷ் தயாள், இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் வகையில் கார்ட்டூன் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அந்த கார்ட்டூனில், ‘பல இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்திக் கொலை செய்வதைத் திட்டமாக வைத்துச் செயல்படும் இஸ்லாமியர் ஒருவர், கத்தியைத் தனக்குப் பின்னால் மறைத்து வைத்து மற்றொரு பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தி பலியாக்க முயல்கிறார். அந்தப் பெண்ணும் தன் கண்களைக் கட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக அந்த இஸ்லாமிய நபரின் காதல் வலையில் வீழ்வதுபோல அந்தக் கார்ட்டூன் வடிவமைக்கப்பட்டுள்ளது’.