“இந்த ஆண்டு மூன்று போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன்களில் தோனியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி சேப்பாக்கில் நடந்த போட்டி ஒன்றில் எங்களால் பேசவே தொடங்கமுடிய வில்லை. அவர்களின் ‘தல’ என்ன சொல்கிறார் என்பதைக் கேட்காமல் அங்கிருந்து யாருமே கிளம்புவதாக இல்லை. இத்தனை ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ரோஹித், சச்சின் மற்றும் மும்பை இந்தியன்ஸ்; விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் எனப் பல சிறப்பான வீரர், ரசிக பந்தங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தோனி – சிஎஸ்கே ரசிகர்களிடையேயான பந்தம் ஈடு இணையற்றது. அவர் திரையில் தோன்றினாலே மைதானம் பற்றிக்கொள்கிறது.”
இறுதிப்போட்டியில் அவருடன் உரையாடுவதற்கு முன்பு, ஹர்திக் பாண்டியாவுடன் கூலாகப் பேசிக்கொண்டிருந்தார் தோனி. அவரிடம் சென்று, ‘கடைசியாக கோப்பை வென்றபோது, உங்கள் லெகசி பற்றிக் கேட்டேன். அதிலிருந்தே இன்றும் தொடங்கவா?’ என்று கேட்டேன். ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். என்னிடம் பதில் தயாராக இருக்கிறது’ என்றார். அடுத்த பத்து நிமிடங்கள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது அதுதான். ‘ஓய்வு பெறுவதை அறிவிக்கப்போகிறாரா, இல்லை வேறு எதுவும் சொல்லப் போகிறாரா’ எனப் பல எண்ணங்கள் அலையடித்தன. மற்றவர்களை பேட்டிகாணும் போதும் அதையேதான் யோசித்துக்கொண்டிருந்தேன்.