பிஸ்பினால் ஏ-வினால் மருத்துவ பாதிப்புகள் ஏற்படுவது எப்படி?
பிஸ்பினால் ஏ ஹார்மோன் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. தொடர்ந்து, பிஸ்பினால் ஏ-யின் அளவு உடலில் கூடும்போது, மலட்டுத் தன்மை, கருக்கலைப்பு, குறைப் பிரசவம், பிறக்கும் குழந்தையில் எடை குறைவாக இருப்பது போன்ற இனப்பெருக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இவை தவிர்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல்பருமன், நீரிழிவு நோய், இதய நோய், மூளை வளர்ச்சியில் பாதிப்புகள், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு, கல்லீரல் பாதிப்புகள், ஆஸ்துமா போன்று பல்வேறு மருத்துவ பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
பிஸபினால் ஏவை எந்தெந்தப் பொருள்களின் உற்பத்திக்கு பயன்படுத்த தடை அமலிலுள்ளது?
உலகம் முழுதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு பிஸ்பினால் ஏ-யினால், மருத்துவ பாதிப்புகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டது. பிஸ்பினால் ஏ-யினால் செய்யப்பட்ட பாட்டில்களை டிஷ்வாஷர்களில் கழுவும்போதும், சூடுபடுத்தும்போதும், பிஸ்பினால் ஏ-யின் மூலக்கூறுகள் உடைந்து, பாட்டிலில் உள்ள தண்ணீர் அல்லது பாலில் சேர்கின்றன. இவ்வாறு, பிஸ்பினால் ஏ-யினால் செய்யப்பட்ட புட்டிகளில் தொடர்ந்து பால் கொடுக்கும்போது, பாட்டில்களில் தண்ணீர் அருந்தும்போது, பிஸ்பினால் ஏ-யினால் செய்யப்பட்ட எபோக்சி பிசின் உள்பூச்சு செய்யப்பட்ட உணவு கேனில் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போது, எபோக்சி பிசின் உள்பூச்சு செய்யப்பட்ட தண்ணீர் பைப்களிள் தண்ணீர் தொடர்ந்து குடிக்கும்போது, உடலில் பிஸ்பினால் ஏ சேர்ந்து, நச்சு அளவினைத் தாண்டும்போது மருத்துவ பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.