வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. ரேலா மருத்துவமனையும் மெட்ராஸ் ரோட்ராக்ட் கிளப்பும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணி பற்றிய விவரங்களை, மருத்துவர் தீபாஸ்ரீயிடம் கேட்டோம்… “வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது, புற்றுநோய் போல உயிரைப் பறிக்கும் ஆபத்தான நோய் இல்லை என்றாலும், இதற்கும் உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும். வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு நிறைய பேருக்கு உள்ளது. 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும், அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
காலில் புண் மாதிரிதானே உள்ளது, யாருக்குத் தெரிய போகிறது என பலர் இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்கிறார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், வெரிகோஸ் வெயின்ஸ் பற்றிய விளக்கம் மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.
இதில் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் உள்ளது. சாலை பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்கள், ஒரு நாளில் பெரும்பாலான நேரம் நின்று கொண்டேதான் இருப்பார்கள். அதிகமாக ஒரே இடத்தில் நிற்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.