சீனாவின் வூஹான் மாகாண ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அமெரிக்க புலனாய்வுத் துறை (எஃப்.பி.ஐ.) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள வூஹான் நகரில் இருந்துதான் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில், உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பல லட்சம் பேர் உயிரிழந்ததோடு, பல நாடுகளில் கடும் பொருளாதாரத் தாக்கங்களை கொரோனா ஏற்படுத்தியது.
அத்துடன் ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என வைரஸின் வேரியன்ட்டுகள் ஏற்படுத்திய அடுத்தடுத்த அலைகள் உலக நாடுகளை அச்சுறுத்தின. இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி, தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் பலனாக, தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்றினை சீனாதான் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.