விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது.
விருதுநகர் மாவட்டம், வாச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான “வனஜா” என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
மாவட்ட நிர்வாக அனுமதியுடன் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
வழக்கம்போல் இன்று பட்டாசு உற்பத்திப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, மூலப்பொருட்கள் உராய்வின் காரணமாக திடீரென வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வெடிப்பு தொடர் வெடிப்புகளாக மாறி ஆலையின் சுற்று வட்டாரத்தின் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் சிதறி சேதமடைந்தன. சில அறைகள் முழுமையாக தரைமட்டமானதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் கடுமையாக காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர்.