இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தவெக-வும், திமுக-வும் அகில இந்திய அளவில் ஒரே கூட்டணிக்குள் வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறார் என்ற செய்தி என்னை தூக்கி வாரி போட்டது.
அதுபோல அவரது கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொன்னேன். அவரைப் புண்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வடத்துருவமும், தென் துருவமும் சேர முடியுமா? எப்படி திமுக கூட்டணியில் இருந்துகொண்டு அமைச்சரவையில் இடம்பெற முடியும். அவர் அரசியலில் வளர வேண்டும் என்று அத்தனை விதமான நிகழ்வுகளிலும் உதவி இருக்கிறேன்.
அவர் பெரிய தலைவராக வேண்டும் என்று நினைத்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்தான் நம்பிக்கை நட்சத்திரம் என்பதால் அவருக்கு 15 வருடங்களாக ஊக்கம் அளித்திருக்கிறேன். என்னால் இயன்ற அளவுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறேன். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன்.
அவர் மீது எந்தக் கோபமோ, வருத்தமோ எனக்கு கிடையாது. நோபல் பரிசு கொடுக்கலாம் என்று நான் சொன்ன கருத்து அவரை புண்படுத்தி இருந்தால் அதனை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அவர் இந்த நாட்டின் நல்ல தலைவர்” என்று கூறியிருக்கிறார்.