லேசான வலி ஏற்பட்டால் கூட பற்களைக் கவனிப்பதில்லை. பிரச்னை தீவிரமடைந்து பொறுக்க முடியாத வலி ஏற்பட்ட பிறகு தான் பல் மருத்துவரைத் தேடிச் செல்கிறோம். இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். பற்களில் லேசான மாறுதல்களை உணர்ந்தாலே, உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரைப் பார்க்கும் சூழல் உருவாகிவிட்டது அல்லது உருவாக்கிவிட்டோம். எது எப்படியோ பற்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் இனி கட்டாயம் தேவை!
குடும்ப நவீன மருத்துவரைப் போல, குடும்ப சித்த மருத்துவரைப் போல குடும்ப பல் மருத்துவரும் இனி காலத்தின் கட்டாயம்.
சித்த மருந்துகளான திரிபலா சூரணம், கடுக்காய் பொடி, மருதம் பொடி, தந்த தாவனப் பொடி போன்றவை பற்களைத் தூய்மைப்படுத்தும். நாயுருவி வேர், ஆலம் விழுது, புங்கன் வேர், விளா, நாவல்… பற்குச்சிகளாகப் பயன்படும் பொக்கிஷங்கள். பல்வேறு கலவைகளில் பற்பொடிகளும் சித்த மருத்துவத்தில் உண்டு! நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கொண்டு வாய்க்கொப்பளிக்கும் பழக்கமும் பலன் தரும்.
உறவுகளோடு அதிகம் நேரம் செலவிடாத சூழலில் தான் பலரும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதே நிலைமை தான் பற்களுக்கும்! இனியாவது பற்களைக் காதலிக்கத் தொடங்குவோம். நாம் ஆத்மார்த்த காதலைப் பற்களின் மீது செலுத்தினால், பற்களும் தனது காதலை நூறாண்டுகள் வரை உண்மையாக வெளிப்படுத்தும்! லவ் யுவர் டீத் டுடே!