இத்தகைய சூழலில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று தொடங்கியது. தொடக்கத்திலேயே, தாங்கள்தான் முதலில் வாதத்தைத் தொடங்க வேண்டும் என்று இரு தரப்பினரும் கூறினர். பின்னர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடுகையில், “அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். சட்டபூர்வ கைதாக இருந்தால், ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.
அமலாக்கத்துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில் செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நள்ளிரவு 11 மணி வரை செந்தில் பாலாஜியிடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பதற்கான எந்தவொரு விளக்கமும் அமலாக்கத்துறையினர் குறிப்பிடவில்லை. அமலாக்கத்துறை ஐந்து முறை சம்மன் அனுப்பியபோது, செந்தில் பாலாஜி ஒரு முறையும், அவரின் ஆடிட்டர் நான்கு முறையும் ஆஜராகியிருந்தனர். இவ்வாறிருக்க, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. எனவே, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான்.