காதர்பாட்ஷாவாக நடித்துள்ள ஆர்யா, சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும் கிராமத்து இளைஞராக, வேட்டி இடுப்பில் நிற்காத முத்தையாவின் கிராமத்து இளைஞராக ந(அ)டித்துள்ளார். வெறித்தனமாக சண்டைக் காட்சிகளில் காட்டும் வீரியத்தை வசன உச்சரிப்பில் சிறிதேனும் காட்டியிருக்கலாம். கொஞ்சமே வரும் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் உணர்ச்சிகளைக் கடத்துவதில் திணறுகிறார். தைரியமாக எதிரிகளை எதிர்கொள்வது, அண்ணன் மகள்களுக்காக உருகுவது என தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்றவகையில் நடித்திருக்கிறார் நாயகி சித்தி இத்னானி.
மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன் என வில்லன்களுக்கு அடிஷினல் சீட் வாங்கி கால் சீட் வாங்கிய முத்தையா, அவர்களை ஆர்யாவிடம் அடிவாங்க மட்டுமே பயன்படுத்தியுள்ளார் என்பது சோகமே. இதில் சிகரெட்டில் வெடிகுண்டை பற்ற வைத்து கொலை செய்யும் காட்சிகளில் தமிழ் மட்டும் சற்று பயமுறுத்துகிறார்.
இஸ்லாமிய பின்னணியில் நடித்துள்ள பிரபு உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தன் பங்கினை சிறப்பாகச் செய்துள்ளார். பாக்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் ஒரு சில காட்சிகள் வந்து போகிறார். காமெடிக்கு என ஒரு காட்சிக்கு வரும் விக்னேஷ் காந்தின் நடிப்பு ‘உச்’ கொட்ட வைக்கிறது. சிங்கம்புலி வழக்கம் போல சிரிக்க வைக்கத் தவறுகிறார். பிரபுவின் மகளாக வரும் சின்னத்திரை நடிகை ஹேமா தயாள் சிறப்பாக நடித்துள்ளார்.