சென்னை: சென்னைகாவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி அவதூறு பரப்புகின்றனர். எனக்கு அடிக்கடி அழைப்பு செய்து மிரட்டல் விடுக்கப்படுகிறது. இறுதியாக புகழேந்தி இறந்து விட்டார் என புகைப்படத்துடன் செய்தியை பரப்ப தொடங்கியுள்ளனர். இது எனது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி புகைப்படத்தை வெளியிட்ட நபர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு வரும் மிரட்டல் மற்றும் அவதூறு பதிவுகளின் ஆதாரங்களுடன் டிஜிபி அலுவலகத்தில் புகாராக அளித்துள்ளேன்.
எடப்பாடி பழனிசாமி இப்படி நடந்து கொள்வார் என நினைத்து பார்க்க வில்லை. ஓபிஎஸ்சை கண்டவாறு திட்டி சமூக வலைத்தளங்களில் பதிவு போடுகிறார்கள். நாங்கள் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்மகன் உசேன் நியாயமாக நடப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் நடுநிலையாக நடத்தாமல் ஒரு சார்பாக நடந்து கொண்டார். அதனால் நாங்கள் வேட்பாளரை திரும்ப பெற்றோம். தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிவிட்டார்கள். தேர்தலில் வேலை செய்யாமல் ஓபிஎஸ் பற்றி பேசி, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தேவையில்லாத வேலையை செய்து வருகிறார்கள். ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்குவாரா என்று பார்க்கலாம். தேர்தல் முடிவு வரும் போது டெபாசிட் கூட வாங்க முடியாவிட்டால், எடப்பாடி பழனிசாமி கட்சியை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்க வேண்டும். நாங்கள் பாஜ மீது மரியாதை வைத்துள்ளோம். அதற்காக அண்ணாமலை சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. நான் அண்ணாமலையை கர்நாடகாவிலிருந்து பார்த்து வருகிறேன். அவரை விட எனக்கு அனுபவம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.