சரி, இதனால் சென்னை அணி எப்படி பலனடையும்? மொத்தமாக 6 வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது அல்லவா. இதில் முதல், இரண்டு, மூன்று என ஒவ்வொரு வாய்ப்பாக வரிசையாக தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ஒவ்வொரு விதமான தொகை வழங்கப்படும். உதாரணமாக முதல் வாய்ப்பாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 18 கோடி ரூபாய் எனில் இரண்டாம் வாய்ப்பாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 14 கோடி ரூபாய் கொடுக்கப்படலாம். தக்கவைக்கப்படும் இந்த 6 வீரர்களில் அதிகபட்சமாக 2 Uncapped வீரர்களை தக்கவைக்கலாம் என விதிமுறை சொல்கிறது. இந்த Uncapped வீரருக்கான விலையாக 4 கோடி ரூபாயை நிர்ணயம் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பார்த்தால் Uncapped வீரர் விதிமுறையின் படி தோனியை வெறும் 4 கோடி ரூபாய் கொடுத்தே சென்னை அணியால் தக்கவைத்துக் கொள்ள முடியும். தோனி மாதிரியான ஒரு வீரரை 4 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைப்பதென்பது, 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் 20 கோடி ரூபாய் வாங்கிவிட்டு ஒரு படத்தில் நடிப்பதை போன்றது.
2021 மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்களை தக்கவைக்கையில் ஜடேஜாவுக்குதான் அதிக தொகை கிடைக்கும்படி தோனி செய்திருந்தார். ஜடேஜா 16 கோடி ரூபாய் பெறுகையில், தோனி 12 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார். இப்போதும் இந்த Uncapped வீரர் விதிமுறை என்பது குறைந்தபட்சமாக தோனியின் இசைவோடுதான் சென்னை அணியால் பிசிசிஐக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டிருக்கும்.