Doctor Vikatan: சளி, காய்ச்சல் வந்த உடனேயே மருந்துகள் எடுப்பது சரியா?

Share

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் வருகிறது. ஒவ்வொரு முறை இப்படி வரும்போதும் உடனே ஆன்டிபயாடிக் அல்லது வேறு மருந்துகள் எடுக்க வேண்டுமா அல்லது பாதிப்பு முற்றியபிறகு சிகிச்சை எடுத்தால் போதுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் வான்மதி

பொது மருத்துவர் வான்மதி

சாதாரணமாக மக்களுக்கு வரக்கூடிய சளி, மூக்கடைப்பு, காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட முக்கிய காரணம் ‘காமன் ஃப்ளு’ எனப்படும் வைரஸ் தொற்றுதான். இந்தத் தொற்றானது வானிலை மாற்றங்கள் பெருமளவில் நடக்கும்போது அதிகம் பரவும்.

மூக்கடைப்பது, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டைவலி, சாதாரண தலைவலி போன்றவை வருவது சகஜம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் இந்த வைரஸ் தொற்றானது இந்த எல்லையோடு நின்றுவிடும். அதைத் தாண்டி மோசமடைவதோ, பெரிய பிரச்னையாக மாறுவதோ இல்லை.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது அந்த வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடி, இரண்டு, மூன்று நாள்களுக்குள் அதை குணப்படுத்திவிடும். அந்த இரண்டு, மூன்று நாள்களுக்கு அறிகுறிகளுக்கேற்ற சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் போதுமானது.

உதாரணத்துக்கு தலைவலி ஏற்பட்டால் உடனே வீட்டிலேயே சுக்கு கஷாயம் போன்றவற்றைச் செய்து குடிப்பது, ஆவி பிடிப்பது போன்ற எளிய விஷயங்களே போதுமானவை. அந்த நேரத்தில் வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். நல்ல உணவும் போதுமான ஓய்வும் இருந்தாலே இந்த நாள்களை சுலபமாகக் கடந்து மீண்டுவிடலாம்.

சளி

சில நேரங்களில், வயதானவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு இந்தத் தொற்றானது நிமோனியாவாகவோ, வேறு பிரச்னையாகவோ (செகண்டரி பாக்டீரியல் இன்ஃபெக்‌ஷன்) மாற வாய்ப்பு உண்டு.

எனவே இரண்டு, மூன்று நாள்கள் சளி, ஜலதோஷம் இருந்தாலே உடனே ஆன்டிபயாடிக் எடுக்க வேண்டியதில்லை. மூன்று நாள்களுக்கு மேலும் அறிகுறிகள் நீடித்தால் அதற்கு மேலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com