சில ஆண்டுகளில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பது எல்லாம் இந்திய அணிக்குத் தற்போது தேவையில்லை” என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீப் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “சதங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான நேரம் இது இல்லை. அது தேவையற்றதும் கூட. அவர்கள் (இந்தியா) தற்போது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும். இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. கோலி 100 சதம் அடிப்பதும், 200 சதம் அடிப்பதும் பெரிய விஷயமல்ல. ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை, மேலும் கடந்த இரு டி20 உலகக்கோப்பை தொடர்கள் என எதிலும் இந்திய அணி பட்டத்தை வெல்லவில்லை. 100 சதம் என்ற சாதனை விராட் கோலிக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கும். ஆனால் இந்தியாவுக்கும், ரசிகர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் தற்போது இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதுதான் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.