இந்திய அணியில் ரோகித், விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கிஷன் – கில் இணை ஓப்பனிங்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பர் 1 டி20ஐ பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தன் ஆதிக்கத்தை தொடர்வார் என நம்பலாம். குல்தீப் மீண்டும் டி20ஐ அணிக்கு திரும்பியுள்ளார். உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சஹல் நிச்சயம் பிளையிங் லெவனில் இடம் பிடிப்பார். சாம்சன் மற்றும் பண்ட் இருவரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். பிளேயிங் லெவனில் யார் இடம் பிடிப்பார் என்பதும் கணிக்க முடியாத ஒன்று. பவுலிங்கில் உம்ரான் மாலிக்கின் ‘வேகத்தை’ பயன்படுத்திக் கொள்ள இந்திய அணி முயல்கிறது. டி20 அணியில் அவரின் எதிர்காலமும் இந்தத் தொடரிலிருந்தே தெரிய வரும் என்பதால் இது சிறப்பான தொடக்கமாக இருக்க வேண்டும். அக்ஷர் படேலின் ரோலை வாஷிங்டன் சுந்தர் செய்வார். தன்னிடம் உள்ள வீரர்களை எப்படி ஹர்திக் பாண்டியா பயன்படுத்தப் போகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஆப்சனாக இருப்பதால் தன்னை நிரூபித்துக் காட்டும் சவாலும் அவருக்கு காத்திருக்கிறது.
நியூசிலாந்து அணியைவிட இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியம், ஏனெனில் அது தன்னுள் பல மாற்றங்களை அடைய தொடக்கமாக இருக்கப்போவது இந்த டி20ஐ தொடர். ஹர்திக் பாண்டியா,”அடுத்த டி20ஐ உலகக்கோப்பைக்கு முன்னர் அணியில் உள்ள அனைவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கப்படும்!” எனக் கூறியிருப்பது அடுத்த டி20ஐ உலகக்கோப்பைக்கு புதிய காம்பினேஷன் உடன் இந்திய அணி களமிறங்க கூடும் என்பதை உணர்த்துகிறது. “மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது போல் இந்திய அணியும் வரும் ஒன்றரை வருடத்தில் கடினமாக இருந்தாலும் சில மாற்றங்களை செய்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.