அமுதராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த குமரன் நகர் போலீஸார், திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த வினோத் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் வினோத்திடம் பேசினோம். “விழுப்புரத்தில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் ஜெயசங்கர் என்பவர், என்னிடம் வாகனங்களுக்கு பெயர் மாற்றும் வேலைகளைக் கொடுப்பார். ஒரு வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500/- கொடுப்பார். அதில் ரூ.800/- அரசுக் கட்டணமும், மற்ற செலவுகளும் போக எனக்கு ரூ.300/- கிடைக்கும்.
அப்படி அவர் இந்த மாதம் 5 இருசக்கர வாகனங்களுக்கு பெயர் மாற்றித்தரும்படி கூறினார். அதில் நான்கு வாகனங்களுக்கு ஒரிஜினல் ஆர்.சி புத்தகமும், ஒரு வண்டியின் ஆர்.சி புத்தகம் தொலைந்துவிட்டது என்றும் சொல்லி எப்படியாவது முடித்துக் கொடுக்கும்படி கூறினார். ஆர்.சி புத்தகங்கள் தொலைவது அடிக்கடி நடக்கக் கூடியது என்பதால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் என்பவர் கடலூரில் வசிப்பது போல நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் அஃபிடவிட் வாங்கி பெயர் மாற்றம் செய்து கொடுத்தேன். திருட்டு வண்டி என்று தெரிந்திருந்தால் வெறும் ரூ.300/- கூலிக்காக இதை நான் செய்திருப்பேனா? இந்த வண்டி மூன்று பேரிடம் கைமாறிதான் இங்கு வந்திருக்கிறது. மதுராந்தகத்தைச் சேர்ந்த தீபக் என்பவர்தான் இதில் முக்கியமானவர். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் என்னை அழைத்து விசாரணை செய்துவிட்டு நேற்றுதான் அனுப்பினார்கள்” என்றார்.