‘What a Shot that is….. fine shot… glorious shot…’ நேற்றைய போட்டி முழுக்க ஒரு 250 தடவையாவது ரவி சாஸ்திரி தொண்டை வற்ற இப்படியான வர்ணனைகளைக் கொடுத்திருந்தார். போட்டியைப் பார்த்துவிட்டு இரவு தூங்குகையில் எங்கோ தூரத்தில் ரவி சாஸ்திரியின் ‘What a shot…’ எனும் குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றிருந்தது. அந்தளவுக்கு நேற்று இரண்டு அணி வீரர்களும் பேட்டிங்கில் பிரித்தெடுத்துவிட்டார்கள். நேற்று காந்திஜியின் பிறந்தநாளும் கூட. எளிமை பற்றி பேசிய மகாத்மாவின் பிறந்தநாளன்று நடந்த போட்டியில் இரண்டு அணி வீரர்களும் அடித்ததெல்லாம் பிரமாண்டம் மட்டும்தான்!
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனான பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதல் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணியில் வழக்கம்போல ரோஹித் சர்மாவும் ராகுலும் ஓப்பனர்களாக இறங்கினார்கள். முதல் டி20 போட்டியில் ராகுல் அரைசதம் அடித்திருந்தார். ஆனால், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 91 தான். எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே முழுமையாக டாட் ஆடி மெய்டனாக்கி விட்டிருந்தார். இங்கே இந்தப் போட்டியில் அதற்கு அப்படியே தலைகீழான இன்னிங்ஸை ஆடினார். முதல் பந்தையே பவுண்டரியோடு ஆரம்பித்தார். ரோஹித் கொஞ்சம் நின்று ஆடிய போதும் ராகுல் மட்டும் தொடர்ந்து அதிரடி காட்டினார். ரபாடா, பர்னல், நோர்கியா என தென்னாப்பிரிக்க வேகங்கள் அத்தனை பேரின் ஓவர்களிலுமே பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் வெளுத்தெடுத்தார். ரோஹித்-ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்தது. அதிரடி காட்ட முயன்ற ரோஹித் ஸ்பின்னரான மகாராஜாவின் பந்தில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார். மகாராஜா வீசிய அடுத்த ஓவரிலேயே ராகுலும் ஸ்வீப் ஆட முயன்று lbw ஆகி வெளியேறினார்.