இந்தச் சமயத்தில்தான் ஒரு பேரதிர்ச்சி அரங்கேறியது. அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக எடுக்கப்பட்ட ஒரு சோதனையில் சஞ்சிதா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாகச் சோதனை முடிவுகள் வெளியாகின. சஞ்சிதாவுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. கனவுகள் அத்தனையும் சுக்கு நூறாக நொறுங்கிப் போனதை போன்ற சூழல். சஞ்சிதா துவண்டுவிடவில்லை. தன்னுடைய தடைக்கு எதிராகப் போராடினார். எங்கெல்லாம் அவரின் குரலை ஒலிக்கச் செய்ய முடியுமோ அங்கெல்லாம் ஒலிக்கச் செய்தார்.
சில மாதங்கள் கழித்து சஞ்சிதாவிற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதற்காகக் கூறப்பட்ட காரணம் ரொம்பவே அபத்தமானதாக இருந்தது. சஞ்சிதாவின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளில் எந்த விதமான தடை செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டதற்கான ஆதாரங்களும் இல்லை எனக் கூறப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் சஞ்சிதாவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சோதனை மாதிரி வேறு எதோ வீராங்கனையின் மாதிரியுடன் கலந்துவிட்டதாலயே முதலில் சந்தேகிக்கும் வகையில் முடிவுகள் வந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
ஒருவேளை எல்லாம் சரியாக நடந்திருந்தால் மீராபாய் சானுவோடு சஞ்சிதாவும் டோக்கியோவில் பதக்கம் வென்றிருக்கக்கூடும். மேலே மீராபாய் சானுவோடு சஞ்சிதாவை ஒப்பிட்டதற்கான காரணமும் இதுதான். ஓர் இடைவெளிக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளில் மீண்டு வந்து சாதிப்பதென்பது அசாத்தியமானது. கடுமையான மனத்திடம் கொண்ட ஒரு சிலரால் மட்டுமே அதைச் செய்ய முடியும். சஞ்சிதாவும் இப்போது அந்த ஒரு சிலரில் இணைகிறார் என்பதே இப்போதே மகிழ்ச்சியான செய்தி.
குஜராத்தில் 36வது தேசிய விளையாட்டுத் தொடர் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. நான்காண்டுகளுக்கு பிறகு இந்தத் தொடரின் மூலம் களத்திற்குத் திரும்பியிருக்கும் சஞ்சிதா ஒரு சிறப்பான கம்பேக்கைக் கொடுத்திருக்கிறார்.
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற சிலருமே இந்தத் தேசிய தொடரிலும் பங்கேற்று பதக்கம் வெல்கின்றனர். அவர்களுக்கு இது மற்றுமொரு பதக்கம் அவ்வளவே. ஆனால், சஞ்சிதாவுக்கு இது ஒரு புது வாழ்வின் தொடக்கம். கனவுகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கான ஊக்கம். அவர் இழந்ததையெல்லாம் மீட்பதற்கான பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அவர் அடைய நினைத்ததை 2024-ல் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலாவது அடைய வேண்டும். அடைவார்!