சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள், சிக்ஸர்களை விளாசிய சூர்யகுமார் யாதவ் | suryakumar yadav hit the most runs and sixes in a single year in international T20 cricket

Share

திருவனந்தபுரம்: சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் 107 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கே.எல்.ராகுல் 56 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர். அரை சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், ஒரே ஆண்டில் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர், இந்த ஆண்டில் 180.29 ஸ்டிரைக் ரேட்டுடன் 732 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த வகையில் ஷிகர் தவண் 2018-ம்ஆண்டு 689 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இதுவரை 34 டி 20 ஆட்டங்களில் விளையாடிய உள்ள சூர்யகுமார் யாதவ் 173.35 ஸ்டிரைக் ரேட்டுடன் 976 ரன்கள் குவித்துள்ளார். இதில் 57 சிக்ஸர்கள், 88 பவுண்டரிகள் அடங்கும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது மேலும் சாதனையை சூர்யகுமார் யாதவ் நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அவர், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இந்த வகையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021-ம் ஆண்டு 42 சிக்ஸர்களையும், நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்தில் 41 சிக்ஸர்களையும் விளாசியிருந்தனர். சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டில் இதுவரை 45 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். முகமது ரிஸ்வான் 26 ஆட்டங்களில் 42 சிக்ஸர்களை அடித்திருந்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் 21 ஆட்டங்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com