“எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும்” – ஓய்வை அறிவித்தார் உத்தப்பா | indian cricketer robin uthappa retires from all format of cricket

Share

அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா. கடந்த 2007-ல் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.

36 வயதான ராபின் உத்தப்பா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 46 ஒருநாள் மற்றும் 13 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 1183 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் அரங்கில் மும்பை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ராஜஸ்தான், சென்னை போன்ற அணிகளுக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,952 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பிசிசிஐ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. ரசிகர்களும் அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2007 டி20 உலகக் கோப்பையில் ஃபவுல் அவுட் முறையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றியின் வீடியோவை பகிர்ந்து உத்தப்பாவுக்கு விடை கொடுத்துள்ளது. அந்த போட்டியில் சரியாக பந்து வீசி ஸ்டம்புகளை அவர் தகர்த்திருப்பார். இதே நாளில்தான் அந்த போட்டியும் நடைபெற்றிருந்தது.

“எனது நாட்டுக்காகவும், எனது மாநிலத்திற்காகவும் கிரிக்கெட் விளையாடியதை கவுரவமாக கருதுகிறேன். எப்படியும், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்தாக வேண்டும். நன்றி கொண்ட இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் நன்றி” என உத்தப்பா இரண்டு பக்க கடிதத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com