15 years of Captain Dhoni: `மறக்குமா நெஞ்சம்' – மாபெரும் தலைவன் உருவான தினம்!

Share

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராகப் பெரும்புகழை பெற்றவர் தோனி. சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுமே தோனிக்கான மாஸ் இன்னும் அப்படியே இருக்கிறது. மாபெரும் தலைவனாக கொண்டாடப்பட்ட மகேந்திர சிங் தோனி 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று தனது பயணத்தைத் தொடங்கினார்.

செப்டம்பர் 14, 2007 இல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில்தான் தோனி முதல் முறையாக இந்திய அணியை முன் நின்று வழிநடத்தினார். பல வரலாற்று சாதனைகளுக்கு தொடக்கமாக அமைந்த அந்தப் போட்டியை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே:

Rahul Dravid

2007 ல் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையில் ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி பலத்த அடி வாங்கியிருந்தது. வங்கதேசத்துக்கு எதிராகவெல்லாம் மோசமாக தோற்று முதல் சுற்றோடு வெளியேறியிருந்தது. ரசிகர்களுக்கே இந்திய அணியின் மீது கடும் வெறுப்பு உண்டானது. இந்த சமயத்தில்தான் அதே ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு இளம் வீரரான தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஒருநாள் தொடரின் உலகக்கோப்பையின் ஏமாற்றிலிருந்தே மீளாத ரசிகர்கள் தோனி தலைமையிலான இந்திய அணியின் மீது நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை. அதுவும் முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராக எனும்போது பெரும் அவநம்பிக்கையே சூழந்திருந்தது. ஆனால், நடந்தது வேறு.

MS Dhoni

தோனி கேப்டனாக பொறுப்பேற்ற அந்த முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை புரட்டி எடுத்தது. ஆட்டம் டை ஆகி பவுல் அவுட் வரை சென்று அந்த சீட் எட்ஜ் திரில்லரை இந்திய அணி வென்றிருந்தது. ஒரு கேப்டனாக தோனியின் ட்ரேட்மார்க் குணாதிசயங்கள் அனைத்தும் அந்த முதல் போட்டியிலேயே வெளிப்பட்டிருக்கும்.

Dhoni

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது 36 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்திருக்கும். நெருக்கடியான அந்த சமயத்தில் க்ரீஸூக்குள் வந்த தோனி நீண்ட நேரம் நின்று 33 ரன்களை அடித்ததோடு அவசியமான பார்ட்னர்ஷிப்களை பில்ட் செய்யவும் காரணமாக அமைந்திருந்தார்.

பாகிஸ்தான் 142 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தடுமாற போட்டி டை ஆகி பவுல் அவுட்டிற்கு சென்றிருக்கும். பவுல் அவுட்டில் பாகிஸ்தான் அணி பயங்கரமான பௌலர்களை இறக்க, தோனியோ சேவாக், உத்தப்பா என பார்ட் டைமர்களை வைத்தே காரியத்தை சாதித்திருப்பார்.

Sehwag

தலைவனாக முன் நிற்பவன் எத்தகைய சூழலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். தோனி இந்த விஷயத்தில் கில்லி. போட்டி டை ஆனால்தானே பவுல் அவுட் என மற்ற அணிகள் சாவகாசமாக இருக்க தோனியோ அந்த பவுல் அவுட்டிற்கென்றே பிரத்யேக பயிற்சிகளை வீரர்களை எடுக்க வைத்திருந்தார்.

பவுல் அவுட்

ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த் போன்றோர் இருந்தபோதும் முன் திட்டமிடலின்படி பயிற்சிகளில் சிறப்பாக பவுல் அவுட் செய்த சேவாக், உத்தப்பா, ஹர்பஜன் போன்றோரையே தேர்வு செய்தார். அவர்களும் தங்களுடைய வேலையை சிறப்பாக முடித்திருப்பர். இந்த விஷயத்தில்தான் பாகிஸ்தான் சொதப்பியிருக்கும்.

Dhoni

‘Result is by-product of Process’ என்பதே தோனியின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றியுமே தோனியின் இதே ஃபார்முலா படி வந்ததுதான். ‘எங்களுக்கு வெற்றி தேவைதான். ஆனால், அதற்காக மட்டுமே நாங்கள் ஆடவில்லை. சின்னச்சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கம். பவுல் அவுட்டிற்கான பயிற்சியையும் இதனடிப்படையில்தான் செய்தோம்.’ என தோனியே கூறியிருக்கிறார்.

2007 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு முன்பாக கட்டுரை ஒன்றில் ‘இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெல்ல வாய்ப்பே இல்லை’ என ரவி சாஸ்திரி எழுதியிருப்பார். ரவி சாஸ்திரிக்கு வேண்டுமானால் அரையிறுதி வரைக்கும் இந்திய அணியின் மீதும் தோனியின் மீதும் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்திய ரசிகர்களோ பாகிஸ்தானுக்கு எதிரான அந்த பவுல் அவுட் முடிந்த தருணத்திலேயே இந்தியா மீது நம்பிக்கை வைத்து தோனியை தலைவனாக ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர்.

MS Dhoni

தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனாலும் அவரின் சாதனைகளை பற்றி பேசும்போதெல்லாம் இந்த போட்டியை தவிர்த்துவிடவே முடியாது.

மறக்குமா நெஞ்சம்!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com