மதுஷன், புதுப்பந்தில் மட்டுமல்ல, மிடில் ஓவர், டெத் ஓவர் என மூன்று கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது ஸ்லோ பால்களும் இன்ன பிற வேரியேஷன்களும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி தந்தன. இஃப்திகார் – ரிஸ்வான் இடையே நீடித்த 71 ரன்கள் பார்டனர்ஷிப்பை அவர் முறித்ததுதான் இலங்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட தருணம். அங்கேயே பாகிஸ்தானின் நம்பிக்கை சற்றே குலைய ஆரம்பித்தது. எனினும் கோப்பையை உறுதி செய்தது ஹசரங்கவின் அந்த ஒரு ஓவர்தான்.
ஒரு லெக் ஸ்பின்னர் ஆல்ரவுண்டராகக் கிடைப்பது எப்போதும் அணியை ஒரு படி முன்னெடுத்துச் செல்லும். அதிலும் ஹசரங்க போன்ற திறமையுடைய டி20 ஆல்ரவுண்டர், அணிக்கான வரம். இப்போட்டியிலும் அதனை மீண்டும் நிரூபித்தார் ஹசரங்க. ரிஸ்வான், ஆசிஃப் அலி, குஸ்தில் ஆகிய மூவரையும் காலி செய்த ஹசரங்கவின் ஓவர்தான் ஆசிய சாம்பியனாக இலங்கைக்கு முடிசூட்டியது. இறுதி மூன்று ஓவர்களில் சற்றே போராடினாலும் பாகிஸ்தானால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது ஆறாவது ஆசியக் கோப்பையை இலங்கை ஏந்தியது.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு மறுபடியும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இலங்கை. முந்தைய எல்லாக் கோப்பைகளையும் விட, இக்கோப்பை அவர்களுக்கு மிகவும் ஸ்பெஷல். நாட்டு நிலவரத்தால் தங்களது நாட்டில் நடத்தக்கூட முடியாத தொடரை இம்முறை அரபு மண்ணில் இலங்கை நடத்தியது. அப்படியிருக்க இக்கோப்பை அவர்களுக்கு மாபெரும் நம்பிக்கையையும் அடுத்தடுத்த தொடர்களுக்கான உத்வேகத்தையும் கொடுக்கும்.